Tuesday, December 02, 2008

காடு


காரிருள் குடைந்த
காடுகளின் காதுகளின்
ஊதும் புல்லாங்குழல்
வண்டுகளின் துளைகள்.

கதிரவனைக் கூட
அனுமதிக்காத காடுகள்
எப்படியோ காற்றை மட்டும்
அனுமதிக்கின்றன!

அச்சமா துணிச்சலா
தெரியாமல் கூவுகின்றன.
குயில் குஞ்சுகள்.

அச்சம்தான் என
உறுதிப் படுத்தி
பிளிறுகின்றன களிறுகள்.

படபடப்பில் துடிப்பதை
கொஞ்சம் நிறுத்தி
வைக்கின்றன மெல்லின
மாக்களின் இதயங்கள்.

திடீர் நிசப்தம்.
மொட்டுகள் அவிழும்
ஓசையைத் தவிர எதுவும்
காதிற்கு எட்டுவதில்லை.

காடுகள்கூட கவிதைகள்
தான் கண்விடுத்து
கருத்தால் காண்கையில்.

No comments: