Thursday, December 04, 2008

நீ வரும் நாளுக்காக



உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிடு.

என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிடு.

என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிடு.

விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிடு.

உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிடு.

கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிடு.

மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிடு.

நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிடு.

உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!

எப்போதடி வரப் போகிறாய்?

அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய.

Tuesday, December 02, 2008

தேடல்


உனக்கான என் தேடலில்
முதன்முதலாய் தொலைந்தவன்
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு என்னையும்.

காலம் மறைத்து வைத்த
உன்னைக் கண்கள் கண்டறிந்த
சமயம் உன்னிடத்தில் காதல்
இருக்கவில்லை.

யுகங்களாய் சேமித்தக் காதல்
நொடிப் பொழுதில் கரைவது
தெரிந்ததால் நான் உண்மை
மறைக்கவில்லை.

தொடமுடியா தூரத்தில் தெரியும்
மாலைப் பரிதியின் மயக்கும்
பிம்பம் ரசிக்கும் நீ உன்
அருகாமையில் என் நேசத்தை
உணராமல் போவது இன்றும்
எனக்கு வியப்பே!

கட்டிப் போடுவதற்கு காதல்
உன் வீட்டு நாய்க்குட்டி அல்ல.
வெட்டி விடுவதற்கு காதல்
களைச் செடியும் அல்ல.

உன் மௌனம் தாண்டி
ஒருநாள் காதல் வெளிவரும்.

காத்திருக்கிறேன் கண்மணி.

காடு


காரிருள் குடைந்த
காடுகளின் காதுகளின்
ஊதும் புல்லாங்குழல்
வண்டுகளின் துளைகள்.

கதிரவனைக் கூட
அனுமதிக்காத காடுகள்
எப்படியோ காற்றை மட்டும்
அனுமதிக்கின்றன!

அச்சமா துணிச்சலா
தெரியாமல் கூவுகின்றன.
குயில் குஞ்சுகள்.

அச்சம்தான் என
உறுதிப் படுத்தி
பிளிறுகின்றன களிறுகள்.

படபடப்பில் துடிப்பதை
கொஞ்சம் நிறுத்தி
வைக்கின்றன மெல்லின
மாக்களின் இதயங்கள்.

திடீர் நிசப்தம்.
மொட்டுகள் அவிழும்
ஓசையைத் தவிர எதுவும்
காதிற்கு எட்டுவதில்லை.

காடுகள்கூட கவிதைகள்
தான் கண்விடுத்து
கருத்தால் காண்கையில்.

அம்மா


கருவறை என்னும்
இருட்டறையில் நான்
கண்ணயர்ந்த போது
உயிரினை ஒளியாய்
உள்ளே ஊற்றிய
தெய்வம் நீ.

நான் மண்ணில்
பிரசவித்த போது,
உன் வலியையும்
வசீகரமாய் மாற்றி
புன்னகைத்தாய்.

நீ என்னைக் காற்றில்
தூக்கி எறியும்
போதெல்லாம்
பயமின்றி சிரிப்பேனே!

ஏனம்மா? வீசி எறிந்த
கரங்கள் உனதென்பதால்.

நான் நடைபழகும்
நாள்களில் விழும்
வேளைகளில் தரையாக
தாயே நீதான் தாங்கிக்
கொண்டாய்.

மண்ணெடுத்து உண்கையில்
நீ பார்க்கும் போது,
அடிப்பாயோ என்று விழி
மூடும் நேரங்களில்
மார்போடு அள்ளி
அணைத்து கொஞ்சுவாயே.
நீ எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டவள் தான்.

நான் மொழியின்றி
பிதற்றும் பருவங்களில்,
"அம்மா சொல்லுடா"
எனக் கெஞ்சுவாயே
இப்போதும் சொல்லத்
துடிக்கிறேனம்மா.

விரதங்களால் என்னுயிர்
வளர்த்தாய்.
வாழ்க்கையையே எனக்காக
அர்ப்பணித்தாய்.

இன்னொரு பிறவியிலாவது
உன் தாயாய் நான்
பிறந்து உன்கடன் தீர்க்க
ஓர் வரம் வேண்டும்.

நீ நூறாண்டுகள் வாழ,
உன் மடியில் நான்
ஒரு மழலையாகி
என்றும் தூங்க
இறைவனை வேண்டுகிறேன்.

வேய்குழல்


என்னை என்ன
செய்தாய் வேய்குழலே,
உன் நாதத்திலே வரும்
கீதத்திலே நெஞ்சம்
மோட்சம் பெறுகிறதே.

இதழ் ஓரம் நீ ஈரப்
படுத்தி இசைக்கின்ற
கானங்கள் என் செவியிருக்கும்.

இதயத்தை நீ வருத்தி
பிறக்கின்ற இசை எல்லாம்
என்னுயிர் குடிக்கும்.

வண்டுகள் துளைப்பதைத்
தாங்கிக் கொண்ட நீ
என் முச்சுக் காற்றை
சுமப்பதையா வலி என்கிறாய்.

ஆயிரம் கண்கள்
கொண்டு என்னை நீ
காண்கையில் என் விழிகள்
காதல் வயப்படும்.

கவிதை வாசித்த உன்
கண்கள் கண்ணீர் வடிக்கையில்
உன்னை சுமந்த மனம்
ஏனோ பயப்படும்.

விரலிடை உன்னைப்
பதுக்கி உதட்டினில் சூடேற்றி,
ஒரு முறையேனும் என்
சுவாசத்தை இசையாக்க
அனுமதி தா.

காமத்தைக் கடந்து
கரங்களில் உருள்வாயோ,
இரேகைகள் அழிய
தேகங்கள் தொலைப்பாயோ,

நான் என்னும் கர்வம்
அழியும் படி சிறுசிறு
நாணங்கள் புரிகின்றாய்.

தான் என்னும் நிலை
கடந்து ஊடுருவுகையில்
நீயே தெரிகின்றாய்.

என்னை என்ன
செய்தாய் வேய்குழலே?
என்னிடத்தில் நானில்லை.

என்ன செய்வாய்


இருட்டிலும் என்னை
நிழலாய் தொடர்கின்றது
உனது நினைவுகள்.

இமைக்குள் பதுக்கி
வைத்தாலும் வழிகிறாய்
என் கண்ணீராய்.

கூட்டத்தை வெறுக்கிறேன்.
தனிமையில் இருக்கிறேன்.
சிறு காகிதம்
கண்டாலும் கவிதைகள்
கிறுக்குகிறேன்.

ஏனடி இந்த
மாற்றம்?
புரியாமல்
கிடக்கிறேன்.
என் நிலை
நான் மறந்து
எங்கேயோ நடக்கிறேன்.


பூக்களையே
ரசிக்க தெரியாதவன்.
இன்று புழுக்களை
கூட ரசிக்கிறேன்.
உன் நினைவுகள்
உடன் இருப்பதால்
மண்ணை கூட
அமுதென புசிக்கிறேன்.

என்னை என்ன
செய்ய போகிறாய்?
வாழ்வது ஆனாலும்
சாவது ஆனாலும்
உன் அருகாமையில்
அது நிகழட்டும்

நீ இருப்பதால்


தடுமாறும்
நேரங்களில்
தடமாக
நீ இருந்தாய்.

காய பட்டு
நிற்கையில் உன்
நட்பே எனக்கு
மருந்தாய்.

நான் பேசினாலும்
ஏசினாலும் ஏசு
போலவே பொறுமை
காத்தாய்.

உன் வெற்றிகளை
எல்லாம் என்
வெற்றியாகவே
பெருமை பூததேன்.

அகராதியில்
நட்பென்னும் வார்த்தைக்கு
பொருளாய் உன்
பெயரை பொறிக்கலாம்.

நீ உடன்
இருந்தால் இதயத்தை
அன்பால் நிறைக்கலாம்.


உனக்காக நான்
செலவழித்த
கண்ணீரை நீ
அறிவாய்.

ஒவ்வொரு விடியலிலும்
உன்முகத்தில் நான்
விழித்த நேரங்கள்
பெரிதாய்.

நோய்வாய் பட்டு
நீ விழுந்தாய்.
நோன்புகள் பல
நான் இருந்தேன்.

தாயாய் சேயாய்
நீ வரவே
தவங்கள் பல
நான் புரிந்தேன்.

தவறு ஏதும்
புரியாமல் உன்னோடு
பேசாமல் நான்
கிடந்தேன்.

எதிரே உன்னை
கண்டாலும் வேறு
திசையில் நான்
நடந்தேன்.


அன்று

கண்ணீர் துடைக்க
நீ இருந்தாய்.

உன் வருகைக்கு
பின் அழுவதற்கு
காரணமும் அழிந்து
போனது.

நீ இருக்கும்
காரணத்தால் சோகமும்
சந்தோஷம் ஆனது.

நமக்கு பிரிவு
மரணத்தில் மட்டுமே.

மரித்த கவிதை


குழந்தையை எடுத்து
கொஞ்சும் போது
அதன் இதழ்
ஓரம் தெறிக்கும்
எச்சிலாய்
என்னை ஒவ்வொரு
முறையும்
ஈரப்படூத்துகிறது
உன் நினைவுகளும்.

செவிடாய் கிடக்கும்
என் செவிகளில்
புல்லாங்குழல்
வாசித்து ஓடுகிறாய்.
இசையா இரைச்சலா
என புரியாமல்
நானோ உன்னை
தேடுகிறேன்.

நீ இலக்கண
கிருமி.
உன்னை கண்டால்
கவிதை நோய்
எனக்கு தோற்றிடும்.
மருந்தாய் எதை
தருவாய்?
சாவையா?
வாழ்வையா?

உன்
நெற்றி போட்டு,
ஒற்றை சடை,
கற்றை கூந்தல்,
தெற்று பல்
இவற்றிற்கு எல்லாம்
தமிழில் இலக்கணம்
இல்லை என்று
தலை கணத்தில்
திரியாதே!

தமிழ் உன்னால்
போதை ஏறி
கிடக்கிறது.
கொஞ்சம் பாதை
மாறி நடக்கிறது.
நான் என்ன செய்ய?

ஒட்டு மொத்த
அன்பையும் உனக்காக
தேக்கி வைத்து
இருக்கிறேன்.
கொஞ்சமாவது அதில்
மூழ்கி விட்டு
போ.
என் அன்பெனும்
கங்கை நதி
புனிதம் அடையட்டும்.

நீ என்னை
பிரியும் போதே
கவிதைகளும்
மரித்து விட்டன.

இதோ இங்கே
கூடி கிடப்பது
எழுத்து பிணங்கள்
மட்டுமே.

Monday, December 01, 2008

பேராசை


வாழ்க்கை தரும்
என நினைத்த
உன் முகம்
தான் இன்று
வலியையும்
தருகிறது.


நீ உடன்
இல்லை என
உணரும் போது
என் நிழலுக்கும்
வலிக்கிறது.

வரமாய் மனைவி
வாய்க்க வேண்டும்
என சிலர்
நினைப்பது இயல்பு.

ஆனால்
வரமே மனைவியாய்
வர வேண்டும்
என நான்
நினைப்பது
கொஞ்சம் பேராசை
தான்.

இருந்தாலும்
அதை
நிறைவேற்றி விடு.

Wednesday, November 26, 2008

அன்பே


விழியசைவில் ஒரு
விளம்பரமா?
அதை வாங்கிட
என்னுயிர் வருமா?

உன் விரல்நுனியில்
புது சுயம்வரமா?
என்னை மணந்திட
தேவதை வரம்தருமா?

தூரத்தில் நின்றுப் பார்த்து
தூரல்கள் தெறிக்கிறாய்.
அருகில் வந்து நின்று
அடைமழை பொழிகிறாய்.

உன் நிழல் தீண்டும்
வேளையில் என்
விரதங்கள் தீருதடி.

என் தனிமையில்
உன் நினைவுகள்
கவிதைகள் கூறுதடி.

யாரும் நடக்காத
ஒற்றையடிப் பாதை
எனக்குள் ஓர் ஊர்வலம்
நடத்திப் போகிறாய்.

நிழலும் பிரிகின்ற
வேளையில் நீயே
உயிராகிப் போகிறாய்.

அடுத்தப் பிறவியில்
நம்பிக்கை இல்லை.

பெண்ணே,

இருந்து விடு
என்னுடன்.
இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை.

கவிதை வரவில்லையடி


கவிதை வரவில்லையடி.

உன்னை காணும் போதும், நீ
நாணும் போதும் உயிரோடு
ஒட்டிக் கொண்டநேசம்
இருந்தும் கவிதை வரவில்லையடி.

வானத்தை வெறித்துப் பார்க்கையில்
நீரலைகளின் வெற்றிடத்தை நிரப்புகையில்
தோன்றிய தேவதையுன் முகம்
உடனிருந்தும் கவிதை வரவில்லையடி.

முழுநிலா என்னை முறைக்க,
காகிதங்கள் காற்றில் துடிக்க,
பேனாமுனை கரம் பிடித்தும்
பேரழகே கவிதை வரவில்லையடி.

ஆயிரம் பாவணைகள் உன்
அழகு முகம் தோற்றுவிக்க,
நான் தோற்று நிற்கும்
தருணமும் கவிதை வரவில்லையடி.

கவிதையே கவிதையை
என்ன செய்தாய்?
கவிதை வரவில்லையடி.

Monday, November 24, 2008

யாருக்கு ஐந்தறிவு


யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.

கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.

எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

அயல்நாட்டு பயணம்


பனிமழையில் விடிகிறது
என் நாள்கள்.
உயிர் வலிக்கும்
சுவாசம் கொள்கிறேன்.

வாழவேண்டும் அதனால்
வலியைக் கொல்கிறேன்.

உறக்கம் முழுதாய்
தொலையும் முன்னே
ஊர்தி ஏறி அலுவலகம்
அடைகிறேன்.

மொழி புரியா
அயல்நாட்டவன் தான்
ஆசானாம்.
எனக்கும் அவனுக்கும்
பொதுவான ஓர்
மொழி மெளனம்தான்.

மெளனம் புரிந்துக்
கொள்ள இது ஒன்றும்
காதல் அல்ல.

எனக்கும் அவனுக்கும்
பொதுவாய் ஒரு
புதுமொழி பிறக்கிறது.

அவன் விளக்கங்கள்
எனக்கும், என்
சந்தேகங்கள் அவனுக்கும்
புரிவதேயில்லை.

நங்கை நினைவுகள்
நெஞ்சில் நகர்வதால்,
அடிக்கடி என்னுலகம்
சென்று இவ்வுலகம்
வருகிறேன்.
காதல் இதயத்தை
கடிக்க கடிக்க
கவிதைகள் தருகிறேன்.

பணம் அறிவு
பதவி எல்லாம்
தாண்டி காதல்
வென்று விடுகிறது.

என் அகந்தை
ஆணவம் அனைத்தையும்
அவள் பெண்மை
கொன்று விடுகிறது.

வாழமட்டுமே ஆசை.
அதனால் வஞ்சியின்
வதனம் வாழ்நாள்
முழுதும் உடன்வரும்
என உள்மனம்
உரைக்க உருள்கிறது
ஒவ்வொரு நாளும்
நொடியாக.

என்னோடு வா


இமைகள் பிரியாது
உறக்கம் கலையாது
காட்சிகள் எப்படி நீ
கொடுத்தாய்?

அருகில் இல்லாமல்
அன்பையும் சொல்லாமல்
எனக்குள் எப்படி நீ
கிடைத்தாய்?


உலகோடு வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே!
உன்னோடு வாழும் வாழ்க்கை
அது போதும் கண்ணே!
என்னுலகம் நீதானே!
என்னுயிரும் நீதானே!


நிழலாக கிடந்தேன் உயிரே
என்னை நிஜமாக்கி சென்றாயே!
இன்று என்னை நெருங்காமல்
அணுஅணுவாய் கொன்றாயே!

யாரோடும் செல்லா மனம்
இன்று உன் பின்னால்
ஓடி ஒளிந்து கொள்ளுதடி.
அதைத் திருப்பித் தராமல்
நீயே வைத்துக் கொள்ளடி.

என்தமிழ் கூறும் வார்த்தைகள்
எல்லாம் உன்னைப் பாடும்.
என்விழிகள் மட்டும் ஏனோ
உன் வதனம் தேடும்.

இம்மண்ணில் ஏன் பிறந்தேன்.
உன்னில் தொலைந்திடவோ
உன்கண்ணில் ஏன் விழுந்தேன்?
உன்னில் கரைந்திடவா?


என்னோடு இதுவரை
என் நிழல் மட்டுமே
உடன் வந்தது.

முதன்முறை உடன்
வர உன்னை கேட்கிறேன்.
வருவாயா என்
வாழ்வின் துணையே!

மகரந்தம் சேர்க்கும்
பூவாய் என் காதலையும்
சேர்த்து வைக்கிறேன்.

ஒரு வண்டாக வந்து
அதைக் குடிக்க மாட்டாயா?

வண்ணத்துப் பூச்சியும்
வயல்தொடும் தென்றலும்
நம்மைப் பற்றி கதைகள்
பேசிக் கொள்ளுதே!

காதைக் கொடுத்து
அதை நீ கேட்டாயா?

உனக்கான பாதையில் எல்லாம்
பெண்ணே நான்தானே
பாதம் தாங்கும் மண்ணாய்
இடம் பெயர்கிறேன்.

உன் பார்வையை
மெளனத்தை கவிதையாய்
என்றும் மொழி பெயர்க்கிறேன்.

Tuesday, November 18, 2008

உயிரே நலமா



பேராழி தாண்டி வந்தாலும்
உயிராவி உன்னில் கிடக்கிறது.
நலம்தானா உயிரே!

காண அழகாய் கோடியிடங்கள்
இருந்தாலும் உன் கண்கள்
காணத் துடிக்குதடி விழியே!

உன் அருகாமையில்அமர்ந்து
உன் சுவாசம் ருசித்த நாசிகள்
இன்று ஈரக்காற்றில் உன்
முகவ்ரி தேடுதடி.

உனக்கு மட்டுமே குறுஞ்செய்தி
அனுப்பிய அலைபேசி இன்று
உயிரற்று பெட்டியில் உறங்கித்
தவிக்கிறது சகியே!

உன் பெயரைத் தாங்கிய
உள்ளங்கை காயம் இன்று
தழும்பாய் மாறி மறைந்த
கதை அறிவாயா தோழி.

உன் நினைவில் உறைந்து
உறக்கம் தழுவிய பல
இரவுகளில் சில இங்கேயும்
செலவழிந்தது புரியுமா

நீ சாய்ந்த தோள்கள்
நீயின்றி கனக்குதடி.
நீ இல்லாத நாள்கள்
நகர மறுக்குதடி.

உனக்காகவே உயிர்
தாங்கி உனக்காகவே
உயிர் நீங்கி மறைய
எனக்கு ஆசையடி.

Friday, November 14, 2008

நகரும் வானவில்



நீ சிரிக்கும் நேரங்களில்
என் சிலுவைக்கும்
சிறகு முளைக்கிறது.

வானத்தை தேடி மனம்
வண்டாய் பறக்கிறது.

நேற்றுவரை என்
தலைக்குமேல் திரிந்த
வானம் இன்று தரையோடு
கிடந்து தவிக்கிறது.

உன் நினைவுகள் வானத்தை
வசப்படுத்தி இடம்
பெயர்கின்றன.

நான் நடக்கும்
பாதைகளில்
என்னைப் பார்த்து
திரும்பிக் கொள்ளும்
பூக்கள் உன்னோடு
வருகையில்
புன்னகைக்கின்றன.

வானம் பூத்த பூமி
இப்போது உன் வதனம்
பார்க்க பழகிக் கொள்கிறது.

விளையாமல் மழைக்காக
காத்து கிடந்த பயிர்கள்
யாவும் உன் புன்னகையில்
விளையக் கற்றுக்
கொள்கின்றன.

பாலைவனம் கூட
நீ நடக்கையில்
வெம்மையை உண்டு
விட்டு தண்மையை
உமிழ்கின்றன.

நீ அன்பு வழிந்து
நிற்கும் அட்சயப்
பாத்திரம்.

நான் உன்மடியில்
தவழ்ந்து உனக்குள்
அமிழ காத்திருக்கும்
காலத்தின் முடிவிலி.

பலகோடி ஆண்டுகள்
பழகிவரும் வானும்
மண்ணும் நம்மைப்
பார்த்து வியக்கின்றன.

கண் படப்போகிறது.
வைத்துக் கொள்ளடி.
என் உதிரத்தால்
ஒரு திருஷ்டிப்
பொட்டு.

வானில் சில நட்சத்திரங்கள்


வானில் சில நட்சத்திரங்கள்.
நீ உற்று நோக்குகிறாய்.
வானம் இன்னும் வெளிச்சமாகிறது.

எங்கோ ஒரு மூலையில்
நீ பார்ப்பதை சொல்லி
அனுப்புகின்றன.
காற்றுக் கற்றைகள்.

உன் விழியலைகள் என்
விரல்களைப் பிடித்துகூட்டி
செல்கின்றன.

நீ ரசிப்பதை நானும்
ரசிக்க.

மலையின் உச்சியில்
அமர்ந்து வானத்தைப்
பார்க்கிறேன்.

மேகங்கள் ஒன்றுகூடி
உன் முகத்தை தோற்றுவித்து
என்னை தோற்கடிக்கின்றன.

என் காதுகளை
செவிடாக்கி,
உன் நினைவும்
என் நினைவும் தனியாக
பிரிந்துச் சென்று
உரையாடிக் கொள்கின்றன.

நீ சூடி எறிந்த
ஒற்றை ரோஜா
பேருருவம் எடுத்து
கண்முன் உதிக்கிறது.

மலர்மணம் வீசும்
மல்லிகை கூந்தலும்,
விரலோடு சிக்கி
உடையும் குழலும்,
நினைவில் வருகின்றன.

தேவதையே என்
பிரிவின் வேதனை
உனக்கும் இருக்குமோ?

எங்கு போவேன்?


உன் விழிகள் தான்டி
பெண்ணே நான் எங்கு
போவேன்?
உன் விரல்கள் தீண்டாமல்
கண்ணே நான் என்ன
ஆவேன்?
என் நினைவுலகில்
நீராடும் தேவதை,
தாங்குமோ உன்
நினைவில் சாவதை.

தாமரைப் பூத்திருக்கும்
தடாகம் இந்த தண்ணீரைக்
கொஞ்சம் ஏந்துமா?
விழிகளாய் வாழும் கயல்கள்
இரண்டு என் இதயக்
குளத்தில் நீந்துமா?


வார்த்தைகள் எதுவுமின்றி
அருகில் வருவேன்.
உன் விழிகள் பேசுவதால்
ஊமையாகி விடுகிறேன்
உதிர்ந்து போன
உரையாடலால்.

தூக்கமில்லாத இரவுகளும்
தேதி தெரியாத நாள்களும்
உன் நினைவுகள் துப்பி
விட்டுச் சென்றவை தான்.

எனக்கானவை என நான்
நினைத்திருந்த எல்லாமும்
சிதைந்து போகின்றன
நீயென் முன் சிரிக்கையில்.

துண்டு துண்டாய்
உடைந்தவற்றை சேகரித்து
முடிக்கும் போது மறுபடியும்
சின்னா பின்னமாக்கிப்
போகிறது உன் புன்னகை.

இப்போது

நினைப்பதற்கும்
இணைப்பதற்கும்

எதுவும் இல்லை
உன்னைத் தவிர.

வாழவைத்துப் போ


இது பிழையா
இல்லை சரியா
உன் விழிதனில்
வந்து மாட்டிக்
கொண்டேன்.

இது நிரந்தரமா
இல்லை நின்றிடுமா
உன்னில் என்
வாழ்வை நான்
கண்டேன்.

போர்க் களம் காணும்
வீரனைப் போல் நாணும்
உன்விழி காண்கையில்
நாளும் பெருமிதமே!

தீக்குளத்தில் என்னை
எறிந்தாலும் திங்கள்
உன் தாய்மையின் சேய்மை
எனக்கு தருமிதமே!

கல்லறையில் பிணத்தின்
மேல் இருந்த பூவென்னை,
கருவறையில் கடவுளின்
மேல் மிதக்க விட்டாய்.

முள்களின் ரத்த வாசம்
மட்டுமே நுகர்ந்த என்னை,
முதல் முறை பெண்மையின்
வாசம் அறிய வைத்தாய்.

யாரோ என்றே
நானிருந்தேன்.
நீதான் அதுவென
உணர்த்தி விட்டாய்.

காற்றில் வெடித்து
சித்றும் பஞ்சாக
நெஞ்சு வெடித்து
பறக்கிறது.

பெண்ணே ஒரு
தும்பியை பிடிப்பது
போல் அதை நீயும்
கொஞ்சம் துரத்திப்
பிடித்துக் கொள்.

ஆள்காட்டி விரலும்
உன்னை அன்றி
வேறொருவரை
காட்டுவதில்லை.

உயிர் மீட்டி உடல்
வாட்டி விழி பாராமல்
செல்பவளே!

ஒரு தடவை என்
ஆவி தடவி போ.
உயிர் மேவிப்
பயனடையும்

காதல்


உன்னை எழுத்தில் வடிப்பது
சிலசமயம் இயலாத காரியம்.

நீ இலக்கணங்களுக்குள்
அடங்காதவள்.
அழகென வரையறுக்கப்
படும் அனைத்திற்கும்
முடங்காதவள்.

நீ அன்பு சல்லடையின்
துவாரத்தின் வழியே
ஆகாயத்திலிருந்து பூமி
புகுந்தவள்.

என் நிசப்தங்கள் கலைத்து
நிழலாய் நுழைந்த
காரிகை நீ அன்பிற்கு
உகந்தவள்.

தொலைதூரம் தெரியும்
தோட்டத்தில் கணநேரம்
ஓய்வெடுக்க எண்ணுகையில்
ஆயுள் முழுக்க நான்
வாழ ஒரு பூக்கூட்டத்தை
எனக்காக உருவாக்கியவள்.

பிறப்பு இறப்பு போலவே
உன் அன்பும் வாழ்வில்
ஒருமுறை தான்.
எனது சிநேகங்கள்
உனக்குள் தொடங்கி
உனக்குள்ளேயே முடிந்து
விடுகிறது.

உன்னைவிட நான்
வாழ்வதற்கு வேறொரு
பெரிய காரணம் எதுவும்
கிட்டுவதில்லை.

உன் அன்பைப்
போல் நினைப்பதற்கு
அருகாமையில் வேறெதுவும்
எட்டுவதில்லை.

உண்ணல் உடுத்தல்
உறைதல் போல
உயிர்த்தலுக்கு
அடிப்படையாய் அமைந்து
விடுகிறது உன் நேசம்.

எனக்கான வசந்த
காலங்கள் உனது
புன்னைகையில் ஒளித்து
வைக்கப் பட்டுள்ளன.

நீ சிந்தும் ஒவ்வொரு
துளி விழிநீரும் என்
இதயத்தில் ஈட்டியாகி
நொடிக்கொரு முறை
மரணம் தருகின்றன.

அதனால்தான் உன்
அழுகையை நான்
என்றும் அனுமதிப்பதில்லை.
நீயோ அதுநான் உன்மீது
கொண்ட அன்பால் என
புரிந்துக் கொள்கிறாய்.

நமக்குள் இருக்கும்
இடைவெளியில்
காற்று அமர்ந்து
கதை பேசுகிறது.

நமது நிழல்களின்
நெருக்கத்தில்
இறுக்கி அணைத்து
கொள்கின்றன.
தேன் குடிக்கும்
வண்டுகள்.

இயற்கையாய் அமைந்த
எதற்கும், உன்னை
பிரதிபலித்தல் என்பது
உதட்டில் வியர்ப்பது
போன்று.

உன்னோடு வாழ்கிறேன்.
ஒவ்வொரு நொடியும்.

காதலித்துப் பார்


எப்போதுமே சலிப்பு தராத ஒரே விஷயம் காதல் தான்.அதை பற்றி எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பேசலாம். மனிதனை மிருகமாக்குவதும், மிருகத்தை மனிதனாக்குவதும் காதல் மட்டும் தான்.எத்தனையோ யுகங்கள் கடந்தாலும் இன்றும் இளமையாய் இருக்கும் விஷயங்களில் காதலும் ஒன்று. மறத்துப் போன இதயங்களைக் கூட பூக்கச் செய்யும் .

நடுநிசியிலும் எழுந்து கவிதை எழுதச் சொல்லும்.சுடும் வெயிலையும் நின்று ரசிக்கச் செய்யும்.நம்மை எதிரியாக நினைப்பவனை கூட நட்பாக பேசச் செய்யும்.அது செய்யாத மாற்றங்களே இல்லை.காதல் ஒரு அழகான கவிதை.அந்த கவிதையை அனுபவிக்காவிட்டால் வாழ்க்கை வீண். அது ஒரு இதமான தென்றல். உள்ளேச் சென்று நுரையீரலைத் தொட்டு வெளியேப் போகும்போது வெப்ப மூச்சாகச் சென்றுவிடும்.ஒரு கூட்டமே பெருமழையைப் பார்த்து ஒதுங்கி போகும் போது நமக்கும் மட்டும் முழுதும் நனையத் தோன்றும். யாருமே நம்மை கவனிக்காவிட்டாலும் எல்லோரும் நம்மைப் பார்ப்பதாகத் தோன்றும்.தனக்குத் தானே பேசிக் கொள்வது, சின்னக் குழந்தைங்கள் அருகில் போய், அதன் தலையைக் கோதுவது, பட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து கொஞ்சுவது எனக் காதலின் சேட்டைகள் நீள்கிறது. காதல் ஒரு இன்பமான நோய். வலியா சுகமா எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு உணர்வு.

நமக்காக ஓருயிர் தவிக்கும் போது நாம் படும் வலிக்கு அளவே இல்லை. நம்மோடு பேச,அழ,சிரிக்க, ரசிக்க,அதட்ட, மிரட்ட,கொஞ்ச,கெஞ்ச,திட்ட ஒருத்தர் எப்போதுமே இருக்கும் சந்தோஷம் பணம் பணம் எனத் திரிந்து வெளிநாடுகளை நோக்கி ஓடுபர்களுக்கு கிடைக்குமா தெரியாது.காதல் ஒரு அழகான ஆரம்பம்.ஏதோ நேற்று தான் இந்த உலகத்தில் பிறந்த மாதிரி இருக்கும். பார்த்து பழகிய பலவற்றிலும் புதியது தெரியும்.அது ஒரு சொல்ல முடியாத ரகசியம். ஒலி மறந்து போன இசை.வார்த்தைகள் இல்லாத கவிதை. வண்ணம் இல்லாத ஓவியம். காட்சிகள் இல்லாத நாடகம்.காத்திருப்பதில் கூட ஒரு சுகத்தை சொல்லிக் கொடுத்தது காதல் தான்.மீண்டும் மழலைக் காலத்திற்கே கொண்டுபோய் எல்லாவற்றையும் கொண்டாட வைக்கும்.காதல் இனிக்கின்ற கடல்.இறவாத ஈசல்.வாசலில் நிற்கும் சூரியன்.உள்ளங்கையில் அடங்கும் நிலா.

யாருக்காகவாவது நீங்கள் கதறி அழுது இருக்கீங்களா?யார் தோள் மேலாவது சாய்ந்து உங்கள் ஆசைகளை சொல்லி இருக்கீங்களா?யாராவது நலமாக இருக்க வேண்டுமென கோவிலில் வேண்டி இருக்கீங்களா? அப்படி என்றால் நீங்கள் யாரையோ காதலிக்கிறீங்க என அர்த்தம்.உங்களுக்காக யாரோ எங்கேயோ காத்துகிட்டு இருப்பாங்க.நீங்களும் காத்திருங்கள் என்னைப் போலவே.காதலில் நனைய.காதலோடு இணைய.காதல் ஒரு புனிதமான விஷயம்.காதலிங்க. உங்க மனம் கோவிலாவதை நீங்க உணர்வீங்க.

Monday, November 10, 2008

விடியாத இமைக் காலம்


செவ்வானம் சிந்துகின்ற முதலொளி நீயடி.
வானவில்லில் சேராத வண்ணமும் நீயடி.
உணர்விருந்தும் உயிரில்லா புதுவித நோயடி.
மீண்டும் உயிர்பெற மடிமீது மலராக சாயடி.

கருவறையில் சுமக்காத நீயும் என் தாயடி.
கொதிக்காமல் குளிர்கின்ற மிக மெல்லிய தீயடி.
உன் வானம் என்னோடு அனுதினமும் தேயடி.
பார்வையில் கொல்கின்ற நீ அழகுப் பேயடி.

பூக்கள் உடைக்கும் கூந்தல் எந்தன் பாயடி.
உன் விரல் பிடிக்கிறேன் அன்பான சேயடி.
உதிரம் உதிர்கின்ற அந்தி வான வாயடி.
இதழ் கரைய இதழால் ஈரமாக்கி மேயடி.

உன் மெல்லடி துளை இல்லா வேயடி.
உயிருள் உருண்டது போதும் சென்று ஓயடி.
மடியோடு மறைத்து மணிநேரம் தூங்கடி.
சிலநொடி நான் மறைந்தால் சிணுங்கியே ஏங்கடி.

மஞ்சளோடு என்னைப் பூசி புதுநிறம் கொள்ளடி.
ஒற்றை விரலை உடலில் ஓடவிட்டு கொல்லடி.
நான் விரட்டும் நேரம் பனியென விழடி.
உனை மிரட்டும்காலம் மார்போடு அணையடி.

சதை தாண்டி மனதோடு புனித காதலடி.
கண்ணோடு கண் கண்டு கரும்பன மோதலடி.
இக்காதல் முடியும் கணம் வரும் சாதலடி.
சாதலும் சுகம்தான் மண்ணாய் என்னை மூடடி.

Friday, October 24, 2008

கடன்காரி



என் இரவுகளுக்கு
மின்மினிப் பூச்சிகளை
இறக்குமதி செய்தவளே!

என் கனவிற்குத்
துணையாய் உன்
நினைவுகளை அனுப்பி
வைத்தவளே!

என் காதலை வாங்கிக்
கொண்டுத் திருப்பித்
தராமல் அடம்பிடிக்கும்
கடன்காரியே!

நான் கொடுத்த கடன்
அட்டவணையைக்
குறித்துக் கொள்.

என் பார்வைகளின்
கொஞ்சல்கள்.
உனக்காக காத்திருந்த
நிமிடங்கள்
தூங்காமல் விழித்திருந்த
இரவுகள்.
உன்னோடு தொடங்கிய
விடியல்கள்.
இடைவெளி இல்லாத
பேச்சுகள்.
தனிமையில் தவித்த
புலம்பல்கள்
நிழலோடு கொடுத்த
முத்தங்கள்.
நிஜத்தில் புரிந்த
நாணங்கள்.
உனக்காய் பூத்த
புன்னகை.

எல்லாவற்றையுமே
வட்டியும் முதலுமாய்
கொடுத்துவிடு,
என் அன்பான
கடன்காரி

மனதின் மனைவி


என் சபலங்களும்
சலனங்களும் சடலாமாக
காதலை சமர்ப்பித்தவள்
நீ தான்.

என் தேகமும்
மோகமும் தொலைந்துவிட
என்னை உன்விழிமடியில்
உறங்க வைத்தவளும்
நீ தான்.


ஒரு தாய்மையை
ஒரு சேய்மையை
எனக்காய் உருவாக்கி,
உன் பெண்மையை
உயிர் மென்மையை
அன்பின் கருவாக்கி
பார்வை ஊசிகளால்
என் ரத்தத்தில்
செலுத்தியவளும்
நீதான்.

முகம் தேய்ந்து
கிடந்த எனக்கொரு
முகவரி கொடுத்து,
என் முகபாவணைகளில்
முழு உயிரையும்
முற்றிலும் படித்து,
எனக்காக புன்னகை
பூத்து காத்திருந்தவளும்
நீதான்

சினம் கொண்டு
நான் சீறியபோதும்,
குணம் கொண்டு
என்னைக் கொஞ்சி
நின்றவளும் நீதான்.

எனக்கே எனக்காய்
ஏழுப் பிறவியும்
துணையாய் வர
இறைவன் அனுப்பிய
தூதுவளும் நீதான்

Wednesday, October 22, 2008

அழகுக்கு சொந்தக்காரி


நிழல் கொடுத்து மலர்
தாங்கி நிற்கும் மரங்கள்
எல்லாம் உன் புன்னகையை
ஏந்தி நிற்கின்றன.

அதன் பாதைகளில் நீ
நடந்து வரும் வேளைகளில்
எல்லாம் "நான் தான் அசைந்து
காற்றைக் கொடுப்பேன்" என
கிளைகள் ஒன்றோடு ஒன்று
மோதி அடித்து கொள்கின்றன.

உன் முகம் காணமுடியாமல்
பூமியில் புதைந்து விட்டதற்காக
அழுது கிடக்கின்றன,
மரத்தின் வேர்கள்.

அவை மண்ணைப் பார்த்து
உன் பாத அழகை பற்றி
நலம் விசாரிக்கின்றன.

மண் பாவம்!
உன் உச்சந்தலை அழகைப்
பற்றி வானத்திடம்
விசாரித்துக் கொண்டிருக்கிறது.

வானம் சூரியனிடம் கெஞ்சிக்
கொண்டிருக்கிறது!
"ஒரேஒரு முறை
அவளைச் சுட்டெரி.
உன்னைக் கோபமாய் அவள்
பார்க்கையில் முகத்தைக்
கொஞ்சம் பார்த்துக்
கொள்கிறேன்" என்று

நிழலுக்காக மரங்களில்
கூடுகட்டி வசித்து வரும்
பறவைகள் எல்லாம் உன்னைக்
கண்டதும் உன் நிழலில்
ஒதுங்குகின்றன.
"எத்தனை பறைவைகளைத்
தான் தாங்கும் ஒரு
பறவையின் நிழல்"

சில பறைவைகளுக்கு
ஏமாற்றம் தான்.

கூவிக் கொண்டிருந்த
குயில்கூட கூவலை நிறுத்தி
நீ பேசுவதை கூர்ந்துக்
கேட்டு ரசிக்கிறது.

காற்றுக்கு கூட
உன்மீது காதலடி.
அடிக்கடி உன்
கூந்தலை கலைத்து
விளையாடி களைப்பாகிறது.

இறைவனின் படைப்புகள்
எல்லாம் என்னைப்
பார்த்து பொறாமைப்
படுகின்றன.

உன்னை நான்
அடைந்ததற்காக

உன்னோடு


உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும் என்
வாழ்வில் இனிக்கிறதே!

என்னோடு நடக்கும்
என் நிழல்கூட எங்கே
நீயெனக் கேட்கிறதே!

ஆகாயம் தாண்டி
பூலோகம் தோண்டி
என் காதல் செழிக்கிறதே!

நெஞ்சம் நனைக்க
மஞ்சம் கனக்க
உன்னுயிர் என்னில் வழிகிறதே!

உன்னோடு சிரித்து
உன்னோடு முறைத்து
என் மேகம் பொழிகிறதே!

Monday, October 06, 2008

அழகியல்


எதற்கடி புன்னகைக்கிறாய்?

இந்த பூமியை உன்
புன்னகையில் புதைக்கவா?

இல்லை! என்னை
உன் பூவிதழால் வதைக்கவா?

உன்னை அழகு எனக்
கூறினால் பொய் என்கிறாய்.

அழகு என்பது என்னைப்
பொறுத்தவரை.....


நீ சிரிக்கும் போது
என்னைத் தொடும்
இதமான மூச்சு,

மழலைப் போல
மணிக் கணக்கில்
நீ பேசும் பேச்சு.

உன் இடைதாண்டி
நடைபோட துடிக்கும்
கூந்தல்.

நான் உற்றுப் பார்க்கையில்
என்னை ஈர்க்க முயலும்
விழிக் காந்தம்.

நீ சிரிக்கும் போதுத்
தனியாய் தெரியும்
தெற்றுப் பல்.

நான் புலம்புகையில்
ஆறுதல் தரும்
அன்பான வார்த்தை.

தொலைபேசியில் உன்
தோழிகளிடம் உலகம்
மறந்து நீ உரையாடும்
விதம்.

உன் பெற்றோர்
மற்றும் உற்றோர்
மீது நீ கொண்டிருக்கும்
ஆழமான அக்கறை.

நாம் நடக்கும் போது
உனக்குத் தெரியாமல்
என்னைத் தொடும்
உன் துப்பட்டா.

நீ வாய்விட்டு சிரிக்கையில்
என்மீது தெறிக்கும்
ஒன்றண்டு எச்சில்
அமுதம்.

ஒரு நிமிடத்தில் நீ
காட்டும் ஓராயிரம்
முகபாவனை.

நான் கோபம் கொள்ளும்
வேளையில் "என்ன ஆச்சு?
இப்படி இருக்காதீங்க"
என நீ வாஞ்சையோடு
சொல்வது.

என் விரக்தியின் உச்சத்தில்
"free விடுங்க" என மழலையாய்
மனதை வருடும் பாங்கு.

கடுந்தணலாய் நான்
வார்த்தைகளை கொட்டும்போது
அதை புன்னகையாய்
மாற்றும் வித்தை.

எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்டு
என்னை சுகமாய் துன்புறுத்தும்
இன்ப நேரங்கள்.

மெளனம் சிலநேரம் பூத்து
"பேசுடா என" என்னை
மன்றாட வைக்கும் மந்திரம்.

என் இரவுகளில்
என் இதழ் அருகே
அமர்ந்து நீ கொஞ்சும்
கொஞ்சல்கள்.

நேரம் கொஞ்சம் கடந்தாலும்
"நேரமாச்சு போகலாமா"
என நீ கெஞ்சும்
கெஞ்சல்கள்.

இதில் எதில் இல்லையடி
நீ சொல்லும் அழகு.

உன்னைப் படிப்பதற்கு
ஒரு பாடத்திட்டம்
வைத்தால் அதற்கு
பெயர் அழகியலாகத்தான்
இருக்கும்.

என் அழகான தேவதையே

காலம் காலமாய் நாம்


நீ நிகழ்கால ஏடுகள்
நீண்ட காலமாய் செய்த
எனக்கான நிர்பந்தம்.
என் உதிரத்தில் உறவாட
படைத்தவன் கொடுத்த
பிரபஞ்சம்.

உன் நெற்றித் திலகம்
ஒட்டி இருக்கும் இடத்தைக்
கொஞ்சம் உற்றுப் பார்.
என் கைவிரல் ரேகைகள்
தென்படக் கூடும்.


பழுத்து விழும் நிலையில்
தன்னுயிரை இழுத்துக்
கொண்டு இருக்கும் கிழ
மரங்களைக் கேட்டுப் பார்.
அவை நம்மை ஏதோ
ஒரு பிறவியில்
சந்த்தித்திருக்கக் கூடும்.


காக்கையின் கத்தல்கள்,
குயிலின் கூவல்கள்,
ஆந்தையின் அகவல்கள்,
இதில் எதிலாவது நம்
முற்பிறவி மிச்சம்
இருக்கலாம்.

மார்பை அறுத்து
மதுரையை எறித்த அந்தக்
கற்புப் பைங்கிளியின்
ஒற்றை சிலம்பாய் நான்
இருந்திருக்கலாம்.
என்னைப் பிரிந்து வாடிய
இன்னொரு சிலம்பாய் நீ
இருந்திருக்கலாம்.

நான் உன்னை விட்டுப்
பிரியும் போது நீ
விட்ட சாபமே கோவலனைக்
கொன்று இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

அகநானூறு கூறும்
அழகான செய்யுள்களுள்
அடங்கி இருக்கும்
காதலில் உனதும் ஒன்றாய்
இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

ஒன்றை மற்றும்
தெரிந்துக் கொள்ளடி.
நாம் காலம் காலமாய்
காதலித்து இணையாமல்
முற்பிறவி முழுவதுற்குமாய்
ஒருவருக்குள் ஒருவராய்
வாழவே மீண்டும்
பிறந்துள்ளோம் என்பதை.

நீ என் இல்லறவியல்


உன்னோடு நடக்கையில்
உலகம் என்னையே
உற்றுப் பார்ப்பதாய்
தோன்றுதடி.

உனக்கும் எனக்கும்
உள்ள இடைவெளியில்
காற்று உட்கார்ந்து
கவிதை பேசுதடி.

சிலுவைகள் சுமந்த
மனம் இன்று சிறகுகள்
விரிக்கிறது.

உன் கூரிய விழிகள்
கூறும் வார்த்தைகளை
கவனமாய் படிக்கிறது.

வறண்டு போன
உதடுகள் உன்பெயர்
உரைக்கையில் கொஞம்
ஈரம் பெறுகிறது.

உன் விழிகளைப் பார்த்து
பேசுகையில் கள்ளம்
இல்லா மழலைகள்
கொஞ்சும் ஞாபகம்.

நீ நாணும் போது
வானிடை வளையும்
வானவில்லின் நினைவலை.

இந்த இயந்திரவியல்
மாணவனின் இதயத்தில்
பூத்த இன்பவியல்.
நீ என் இல்லறவியல்
ஆனால் இதயத்தில்
என்றுமில்லை
துன்பவியல்.

Wednesday, October 01, 2008

வானம் நீ


எனக்கு விடியல் தந்த
வானம் நீ.

உன்னில் நான் சூரியனாய்
பிரகாசிக்கா விட்டாலும்
பராவாயில்லை.

ஏதோ ஒரு மூலையில்
நட்சத்திரமாய் வாழ்ந்து
விட்டுப் போகிறேன்.

மழலையின் மாற்றுரு நீ




இந்த பூமியில் எங்கு
நீ பிறந்தாய்.
அவ்விடம் எனக்கு
தாய்நாடு.

எந்த மொழியில்
என்னோடு பேசினாய்.
அம்மொழி எனக்கு
தாய்மொழி.

எவ்விடம் உன்னை
முதன் முதலாய்
சந்த்தித்தேன்.
அவ்விடம் எனக்கு
தாஜ்மகால்.

உனது கையெழுத்தில்
எனது பெயர்.
முதல் ஓவியம்.

நீ என்னோடு பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை.

உன் மெளனங்கள்
ஊமைக் குயிலின்
உண்மை கீதங்கள்.

உன் கோபங்கள்.
மழலை மொழியின்
மாற்று வடிவம்.

இயல்பாக பேசி,
இயல்பாக சிரித்து,
இயல்பாக பழகி,

ஏனோ இருக்க
முடிவதில்லை.
எப்போதுமே இயல்பாக.

யார் நீ




கடைவிழி காட்டினாய்.
உயிர்குழி வாட்டினாய்.

பருக்களை எல்லாம்
இதயத்தை குத்தும்
ஈட்டியாக மாற்றினாய்.

எச்சிலைக் கூட
எரியும் மனதில்
நெய்யாக ஊற்றினாய்.

தூரதேசம் நின்று
ஈரநேசம் காட்டும்
ஓரக நிலவே!

வண்ண முகத்தில்
வாடிய சாயல்
ஏனடி மலரே!

நான் தொடத்
தெரிந்த பித்தன்.
நீயோ சுடத்
தெரிந்த சூரியன்.

உன் பாதச்
சுவடுகளை அலை
வந்து தழுவும்.
உன் மேனி
மாசினை புதுமழை
வந்து கழுவும்.

இமைகளின் அசைவுகூட
இசையாக மாறும்.
புன்னகை உதடுகளில்
மதுபானம் ஊறும்.

தமிழ் கூறும்
நல்லுலகே உன்
அழகினைப் பாடும்.
கூந்தல் கலைகையில்
மயில் கூட்டம்
மகிழ்ச்சியாய் ஆடும்.

நெருஞ்சி முற்கள்
உன்னைப் பார்த்தால்
குறிஞ்சி பூவாய்
தினமும் மலரும்.

அருகில் நீ அமர்ந்து
இருந்தால் உன்
அழகை இரசித்தே
பொழுதும் புலரும்.

நீ தோழியா?
துணைவியா?

விடை தெரியாத
வினாவில் வாழ்கிறேன்.
தேவதையே யாரடி
நீ?

உனக்கென இருப்பேன்




நீ கண்கள் திறக்க
பல பண்கள் இசைப்பேன்.
ஒரு கவிதை பிறக்க
உன் அழகை ரசிப்பேன்.

உன் முடிமுதல் அடிவரை
பூ முத்தம் கொடுப்பேன்.
உன் இடைதனில் பிடிபட
நான் நித்தம் துடிப்பேன்.

நீ கொஞ்சும் போது
நான் குழந்தை ஆவேன்.
நீ கோபம் கொண்டால்
நான் கொஞ்சம் சாவேன்.

அழகு விழியில் நீர்த்துளி
வழிந்தால் அமிலம் பொழியாதோ!
அன்பின் மிகுதியால் நாம்
அழுதால் ஆனந்தம் வழியாதோ!

என் இதழ்கள் அழைந்தால்
அது உன்பெயர் தானடி.
உன் இதயம் இசைய
இந்த தயக்கம் ஏனடி?

உன் மடிமீது சாய்ந்து
ஒரு மழலையாக தூங்குவேன்.
உன் இதழ்களின் ஈரம்பட
விரல் நகமாக ஏங்குவேன்.

மழைக் கூந்தல் மலர்களை
என் மனதோடு தாங்குவேன்.
மரணம் என்றாலும் உன்
நினைவோடு உயிர் நீங்குவேன்.

Tuesday, September 30, 2008

முத்தத்தமிழ்




அன்றொரு நாள்
அழகைச் சந்த்திதேன்.
அன்று முதல்
தேவதையைத் தினமும்
சிந்தித்தேன்.

காற்றில் ஓர்வாசம் வந்தால்
கண்கள் கம்பன்
கவிமகளைத் தேடும்.

கொடியில் இலை அசைந்தால்
குறள் இடையோ என
ஐயம் மூளும்.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கவிதை
அவளுக்காக எழுதினேன்.

தந்துவிட தைரியம்
இன்றி எனக்குள்
நானே புழுங்கினேன்.

அவள் புத்தனின் எதிரி.
ஆசையைத் தூண்டுவாள்.
கூந்தல் மலர்களை உதறி
பூமியைத் தோண்டுவாள்.

சதையில் செய்த
சிற்பம் அவள்.
இதழ்கள் பேசும்
சித்திரம் அவள்.

அவள்

பேசினால் இயல்.
நடந்தால் இசை.
பார்த்தால் நாடகம்.
மொத்தத்தில் அவள்
முத்தமிழ்.
எனக்காக பிறந்த
முத்தத்தமிழ்.

மன்னிப்பாயா


உன்னை காயப்படுத்தும்
எந்த செயலும் என்னை
இருமடங்கு வருத்தும்.

நாள்கள் சிலகடந்தாலும்
என் நெஞ்சையது
மெதுவாய் உறுத்தும்.

உன் தோழிகள்
என் சோதரிகள்.
இதயத்திற்குத் தெரியும்.
நரம்பில்லாத நாவிற்குத்
தெரிவதில்லை.
சிலசமயம் எல்லை
மீறுகின்றன.
தனிமையில் புலம்பித்
தொல்லைத் தருகின்றன.

மன்னிப்புக் கேட்டால்
மனம் ஆறிவிடுமா?
நீபடும் துயரைத்தான்
கூறிவிடுமா?


என் உயிராய்
உயிர்த்து இருக்கும்
தேவதையே!

நீ புண்படும் வேளைகளில்
உதிர்கிறேன்.
உன் கூந்தல்
பூக்களைப் போல்.

உன் நினைவுகளே
என்னை படலாமாய்
சூழும்போது உன்
நிழற்படம் எதற்கம்மா
எனக்கு?

உன் புன்னகையை
என்றும் வேண்டுகிறேன்.
அது கடவுள் எனக்காக
அனுப்பி வைத்த
கவின்மிகு ஓவியம்.

எல்லாம் மறந்து
கொஞ்சம் சிரி.
நான் உலகத்தையே
மறந்து சிலநொடி
உயிர் வாழ்கிறேன்.

தமிழ்த் தோழி




வல்லினங்களில் வளைந்து,
மெல்லினத்தில் மெலிந்து,
இடையினத்தில் இளைத்தேன்.
முத்தமிழில் திளைத்தேன்.
எழுத்தோடு எழுவேன்.
பிழையோடு விழுவேன்.
வெண்பாவில் வேகுவேன்.
கலிப்பாவில் சாகுவேன்.
சீரோடு சிதைவேன்.
அணியோடு வதைவேன்.
எதுகை மோனையாக
ஒத்துப் போனோம்.
மெய் மட்டும்
இங்கு கிடக்கும்.
உயிர் மட்டும்
எழுந்து நடக்கும்.
உயிர் மெய்யைச்
சேர இயலாதோ!
காதல் ஆய்தம்
ஒருகணம் துயிலாதோ!
உன் உருவம்
கண்டால் உருவகம்.
உள்ளம் கொண்டால்
உவமைத் தொகை.
செய்கைகள் யாவும்
வினைத் தொகை.
சேட்டைகள் செய்தால்
பண்புத் தொகை.

தமிழே!

நம் உறவு என்ன வகை?
உன் காதலே எனக்குப் பகை.

மின்னல் தேவதை




அழகென்ற சொல்லின் அகராதிப் பொருளே!
மேகங்கள் நகுகின்ற கூந்தல் இருளே!
வெண்முத்து பற்கள்தான் பவளக் கற்களோ!
ஐயம் கணும் கண்ணுக்கு மூளும்.

பார்வையே கூறிடும் பார்வையே போரிடும்.
கண்களின் கூர்மையில் உடையும் வாளும்.
எட்டாத கற்பனை கிட்டாத கவிதை
உந்தன் படைப்பு உயிரின் துடிப்பு.

உன் பாதம் பட்டதும் பாலையும்
பூத்தது அழகாய் சிறு மெழுகாய்.
காற்றில் ஆடும் சுருண்ட கேசம்.
மீன்கள் கூடும் ஆற்றின் தேசம்.

இடைத் தொடும் சடைப் பின்னல்.
என்னை எடை இடும் சாதனம்.
இரத்தப் பருக்கள் சின்ன வடுக்கள்
சிந்தும் அழகின் சீரிய நூதனம்.

வளையல் சுமக்கும் இளைய கரங்கள்
என்முகம் புதைக்கும் இன்ப தலையணை.
உள்ளங் கையில் ஒளிந்த ரேகை,
கள்ளன் நான் நடக்கும் பதை.

நீண்டு சிறுத்த கவின் விரல்.
தீண்டிக் கொஞ்சும் தனித் துவம்.
என்னைக் கிள்ளுகின்ற நனி நகம்.
இன்பம் அள்ளும் கள் குடம்.

தோலில் ஊன்றும் ரோமக் கூட்டம்.
தென்றல் வீசும் கவரித் தோட்டம்.
காலைத் தழுவும் வெள்ளிக் கொலுசு
கதறிப் பேசும் எந்தன் மனசு.

காதில் எட்டிப் பார்க்கும் தோடு.
குட்டி நட்சத்திரம் கட்டிய வீடு.
தேவதை சுவாசிக்கும் நாசித் துளைகள்,
இசை உமிழும் குழல் துளை.

வளைந்து நெளிந்த விழிப் புருவம்
கருப்பு வண்ண வானவில் உருவம்.
மொத்தத்தில் நீயொரு இலக்கணம்.
பித்தத்தில் ஏறிடும் தலைக்கணம்.

உன் கன்னக் காகிதத்தில்
முத்தக் கவிதைகள் இயற்றவா?
உன் உதட்டு சாயத்தை
ஒரு விரலால் துவட்டவா?

மின்னலே உன்னைக் கண்டதும்
ஒழிந்தது வாழ்வின் இன்னலே.
ஆழமாய் நேசிக்கிறேன் உன்னை.
யொசிக்குமா உந்தன் பெண்மை.

கண்ணீர்




துயரத்தில் உயிர் துப்பும்
காலத்தின் கரையாத கரிப்பு.

அன்பின் மிகுதியில் கண்கள்
பேசும் திரவக் கவிதை.

குற்றத்தில் குறுகிப் போகும்
குருதியின் நிறமற்ற நீர்.

இயலாமையில் இதயங்கள் வீசும்
ஆற்றாமையின் அடிமைத் தூது.

துரோகத்தில் துய்த்து போன
விழிகளின் வியர்வைத் துளி.

நெடுநாளைய மெளனம் நிரப்பும்
வார்த்தையின் உப்பு வலி.

களிப்பில் இமைகள் தள்ளி
விடும் இன்பத்தின் ஊற்று.

இதில் நீ எதற்காக
அழுகிறாய்?


என்னுயிரே!

நீ அழும்போதெல்லாம்
என் கரங்களும் கண்களும்
காத்து இருக்கும்.

முடிந்தால் உன்
கண்ணீரைத் துடைக்க,
இல்லையேல் உன்னோடு
சேர்ந்து அழ.

முள் நீத்த ரோஜா




அழகு என்பது ஆணானால்
உன் அடிமையாக இருக்கும்.
பழகிப் பிரியும் வேளையில்
நெஞ்சம் கடுமையாக வலிக்கும்.

எரிமலையின் பனிப் பூவாய்
உன்னை நான் கண்டேன்.
இருள் விடிந்தும் தீராக்
காதல் என்னுள் கொண்டேன்.

சிவனுக்கு அந்த செங்கமலக்
கண்ணாள் பார்வதி துணை.
இவனுக்கு இடர் நீத்த
நங்கை நீயே துணை.

கவிதை விதைகளை
என்னுள் துவினாய்.

காதல் ஊற்றி
வளர்த்த செடி,

காலம்தான் அழிக்குமோ!
தமிழாக செழிக்குமோ!

உணர்ந்திட எனக்கு
உயிர் இல்லை.
உரைத்திடு முள்
நீத்த ரோஜாவே.

எங்கே இருந்தாய்



காதலே என்
காதலே கருங்
கேசத்தால் என்னைக்
கொன்றதேன்?
தனிமையில் என்னை
விட்டு தூரம் நீ
சென்றதேன்?

உறங்கும் வரை
உந்தன் சிந்தனை
உறங்கிய பின்பும்
உளறும் எந்தனை,
கண்ணீரில் தள்ளிவிட்டு
கடுமமில கொல்லியிட்டு
காணாதேசம் சென்று
தந்தனை தண்டனை.

என் மூச்சுக் காற்றில்
உன் முகம் கண்டேன்.
உன்னைக் கண்ட பின்பே
உணவு உண்டேன்.

இத்தனை நாள் எங்கு
இருந்தாய்?
தனிமையில் நானோ
இறந்தேன்.

புன்னகை சுமந்த
உதடுகள் எங்கே?
பூக்கள் சுமந்த
கூந்தல் எங்கே?
என்னைப் பார்த்த
பார்வை எங்கே?
என்னை ஈர்த்த
பாவை எங்கே?

தேடியே நான்
தேய்ந்து போனேன்.
வாடியே நான்
மாய்ந்து போனேன்.

வேண்டுமே உன்மடி
என்றுமே!

நீ நகம் கடிக்கையில்
நனைந்து போனதே என்னுயிர்.
நீ முகம் காண்கையில்
மறந்துப் போனதே என்பெயர்.

என் கவிதைத் தோட்டம்
கண்ணீர் சிந்தி அழுதது.
என் கட்டுடல் அது
செந்நீர் சிந்தி விழுந்தது.

கானல் தேசம் என்தேகம்.
மழையாக நீவிழக் கூடாதா?
காந்தம் உமிழும் பார்வைகள்
என்கண்கள் கண்டு நாணுமா?

மறுபிறவி இருந்தால்
துறவியாவேன்.
என்னைத் துறந்து
போவேன்.
உன்னுள் இறந்து
போவேன்.

பாதங்கள் என் கரங்கள்
தாங்குமா?
மெல்லிடை அதில் என்னுயிர்
நீங்குமா?

நீ பேசிய பேச்சு.
எண்ணி விடுகிறேன்.
வெப்ப மூச்சு.
உன் நினைவுகளோடு
என் காலம் செல்லும்.
உன் நினைவையன்றி
எது என்பெயரைச்
சொல்லும்?

Monday, September 29, 2008

உதிரும் கூந்தல் பூ





நடைபாதை வீதியில்
நடக்கும் போது
நங்கை கூந்தல்
நறுமண மலர்
புல்லின் மடியில்
பூத்துக் கிடந்தால்
நெஞ்சில் ஆனந்தம்.

பூவை எடுத்து
பூவையிடம் நீட்டி
உனதாவென வினவ,
ஆமென்று சொல்லி
அவள் குழலிடை
பதுக்கி புன்னகை
புரிந்தால் ஆனந்தம்.

இல்லையென பொய்யை
இயல்பாய் உரைத்து
என்னிடமே பூவைத்
தந்து விட்டால்
ஞாபகமாய் எனக்குள்
எப்போதும் இருக்கும்
நசுங்கிய பூ நாளெல்லாம்
ஆனந்தம்.

அலையும் கரையும்




நீலக் கடலின்
நித்திய அலைகளின்
சத்தம் கேட்டே
நித்தம் திரும்பும்
விரும்பிய அலைகள்.

வாய்வரை வந்த
வார்த்தை உதட்டோடு
ஒளிந்ததால் ஊமையாகி
நிற்கும் அலைகள்.
சொல்ல முடியாமல்
மெல்லமாய் திரும்பும்.

காதல் மொழி
கேட்பதற்கே காதை
வைத்திருக்கும் கரைகள்
அலைகளின் பிரிவால்
அழுது நிற்கும்.

பரிசாய் அலைகள்
தந்த ஈரத்தை
மட்டும் இதயத்துள்
தாங்கி காத்திருக்கும்
கரைகள்.

காதலை சொல்லி
விடுவோம் என்ற
நம்பிக்கையில் அலையும்,
கேட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையில் கரையும்......

காதல் முடிவதில்லை.

கோவிலுக்கு உன்னோடு





கடவுளிடம் சொல்லி இருந்தேன்.
உன்னோடு வருவேன் என.

கடவுளும் காத்திருந்தான்.
கண்மணி உன்னோடு என்னைக்
காணும் நொடிக்காக.

உன் உதடுகள் வர மாட்டேன்
என உரைத்த நேரத்தில்
என் உயிருக்குப் புரிந்து
விட்டது நீ வருவாயென.

பிறவிக் குருடன் பார்வைப்
பெற்றதைப் போல உன்னை
வியந்துப் பார்த்தேன்.
சிலைகள் எல்லாம் கோவிலுக்குச்
சென்றால் யாருக்குத்தான்
வியப்பு வராது?

தாய்க் கோழியின் சிறகில்
தஞ்சம்புகும் கோழிக்குஞ்சாய்,
உன் அருகாமையில் இடம்
பிடித்து நின்றன கால்கள்.
இல்லை அடம் பிடித்து
நின்றன கால்கள்.

உன் இருக்கை அருகே
ஓரிடம் காலியாக,
யாரோ ஒருவர் அமர்வதாக
எனக்கு சைகை காட்டினாய்.

உன் மனதில் அமர்ந்துவிட்ட
எனக்கு உன் அருகில்
எதற்கடி இருக்கை?

கோவிலை அடைந்தோம்.
என் கடவுள் புன்னகைத்தான்.
தவங்கள் நிறைவேறும் போது
பக்தனுக்கும் கடவுளுக்கும்
இடைவெளிகள் இருப்பதில்லை.
நானும் புன்னகைத்தேன்

உன்னை என்னிடம் சேர்த்தபிறகு
இனிமேல் அவன் நேரில்
வரமாட்டான் என்பது எனக்குத்
தெரியும்.

உன்னை விட வேறெந்த
வரத்தையும் எனக்கு அவனால்
கொடுத்துவிட முடியாது
என்பது அவனுக்கும் புரியும்.

இனிமேல் அவன் வருவதற்கு
காரணங்கள் இருக்கப் போவதில்லை.
நம் திருமணத்தைத் தவிர.

"ஏதாவது வேண்டி கொள்ளுங்கள்"
எனச் சொல்கிறாய்.

நீ அருகில் இருக்கையில்
என் வேண்டுதல் என்னவாக
இருக்கும் என்பது உனக்குத்
தெரியாதா என்ன?

அங்கும் இங்கும் அசையும்
உன் கருவிழிகள் காண்கையில்
அறிவியல் கற்பித்த தனிஊசலின்
தத்துவம் நினைவிற்கு வரும்.

முற்றுப் புள்ளிகள் இல்லாமல்
நீ பேசிக் கொண்டே இருந்தாய்.
தமிழ் மூச்சிரைத்துத் நின்றது.

தசைகளைக் கிழித்து உதிரத்தில்
தோயும் ஊசிமுனைகளாக
"போகலாமா" என்றாய்.

யுகநேரம் உன்னோடு
பேசினால்கூட கிளம்பிவர
விரும்பாத மனம் வார்த்தைகளால்
சொன்னது.

"பத்து நிமிடம்"

நிமிடங்கள் கரைந்தன.
நாம் பிரியும் நேரம்.
கடவுளுக்கும் களிப்பில்லை.

இந்த தற்காலிக பிரிவுகள்
நம்மைத் தகர்த்துவிடாது
என்பது சிவனுக்குத் தெரியும்.
வாடிய அவ்ன் முகம்
மலரத் தொடங்குகிறது.

என் இதழ்களும் பூக்கத்
தொடங்குகின்றன.
என்னையும் அறியாமல்
கரங்கள் கூப்பி.

எனதுயிரே


எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ பிறந்தாய்.
விழிதுயிலாமல் விலகி
நிற்க வழித்துணையாய் நீயிருந்தாய்.


உனதுருவில் உன் தருவில்
நெஞ்சம் இளைப்பாற நான்
உயிர் பிழைத்தேன்.

யாருமற்ற வீதிகளில் அழகாய்
நிற்கும் கோலம் போலவே
நானும் வீற்றிருந்தேன்.

கோலம் தன்னை தனக்குள்
கரைக்கும் மழைத்துளியாய்
நீயும் என்மேல் விழுந்தாய்.

கொடும் தணல் தன்னை
தனக்குள் பூட்டிவாழும்
பூமியைப்போல்,
சிரிப்பையும் அழுகையையும்
எனக்குள் சேர்த்து வைத்தேன்.

இரத்த நாளங்கள் இரசித்திட
திசுக்கள் எல்லாம் தித்திக்க
உதிரத்தில் உருண்டு நின்றாய்.
உயிரை திருடிச் சென்றாய்.

உன் அதரம் அசையும்
ஓசைதனில் இசைகள் கேட்டேன்.
உன் பாதங்கள் போகும்
பாதையில் திசைகள் பார்த்தேன்.

பிரபஞ்சத்தின் இடுக்குகளில் வசித்து
வந்தவன் உன்னால் தான்,
பிரபஞ்சத்தையே இடுக்காகப்
பார்க்கிறேன்.

அருகில் நீயிருந்து வார்த்தை
வராத சமயங்களில் உதடுகள்
வியர்க்கிறேன்.

உள்ளங்கை ரேகைகளில்
வரிகளாக படர்வது நீதான்.
இருளிலும் என்னை
நிழலாய் தொடர்வதும் நீதான்.

நிகழ்காலம் அது இப்படியே
நீண்டுவிடக் கூடாதா?
என் வருங்காலம் முழுதும்
உன்னோடு வாராதா?

Thursday, September 25, 2008

பாரதி கண்ணம்மா


எங்கேயோ கேட்ட குரல்
இங்கே வந்து ஒலிப்பதென்ன?
நெஞ்சில் விழுந்த விதை
இன்று விழுதாய் முளைப்பதென்ன?

தீதில்லா ஒரு காதல்
தீர்ந்து போகக் கூடுமோ?
மேகம் இருக்க நிலவை
மின்னல் வந்து மூடுமோ?

யாரடி நீ கண்ணம்மா?
பாரதியின் கவி பெண்ணம்மா

ஓரப்பார்வையில் உயிர்
என்னை அழைப்பதேனோ!
ஈரப் போர்வையாய் இதயம்
நனைந்து உயிர் பிழைப்பதேனோ!

இரண்டடி குறள் இனிமைதானடி
ஓரடி நீயடி மற்றடி நானடி.
பிரித்திட யாரடி பாவையே கூறடி.

மனம் ஒன்றியபின் மானிடர்
என்ன செய்யக் கூடும்.

நீ


எனக்கென இறைவனால்
இயற்றப்பட்டு கண்முன்
பூத்தக் கவிதை நீ.

முள்களை மட்டுமே
தந்தவர்களுக்கு மத்தியில்
முதன்முதலாய் பூக்களைக்
கொடுத்ததும் நீதான்.

தழும்புகளில் எல்லாம்
மயிலிறகாய்த் தடவிக்
கொடுத்தவள் நீதான்.

வலிகளால் நான்
வதையும்போது வருடி
விட்டவளும் நீதான்.

உன் புன்னகைப்
பூக்களை நுகர்ந்த பின்தான்
நானும் மனிதனானேன்.

உன்மேல் அன்பைப்
பொழியும் போதுதான்
நானும் புனிதனானேன்.

நான் தொலைத்த
வசந்த காலங்களின்
ஒட்டுமொத்த சேமிப்பு நீ.

நேற்றுவரை நான்
காத்துவந்த மெளனங்களின்
சாவி நீ.

உனக்குள் தொடங்கி
உனக்குள் முடங்கி
உனக்குள் முடிந்து
விடுமென்றால் வாழ்வு
அர்த்தம் பெறும்.

உன் சிறுவிழிகளில்
சிதைந்து,
உன் குறுநகையில்
புதைந்து,
உன் அருகாமையில்
என் ஆயுள்
முடிய வேண்டும்.

உன் நிழலினில்
என் நாட்கள்
நீள வேண்டும்.

என் அருகில் நீ
இருந்து நானழுதால்
கண்ணீரும் தித்திக்கும்.
உன் மடியில்
நிகழ்வதானால் என்
மரணம் கூட
மகிழ்ச்சிதான்.


என்றும் உனக்காக,
உதயகுமார்

அழகின் அழகே


உன் சுட்டுவிரல் தொட்டுவிட
சூரியக் கதிர்கள் துடிக்கும்.
உன் பட்டுஇதழ் பட்டுவிட
பருவ மலர்கள் வெடிக்கும்.

புல்லின் தாகம் தீர்க்கும்
பனித்துளி உன் பருவோ?
அழகின் மோகம் கூட்டும்
பால்நிலா உன் உருவோ?

அழகே ஏய் அழகே
அடக்கி வைத்த அழகே!
மின்னல் கூட்டம் சேர்த்து
மின்மினிப் பூச்சிகள் செய்வேன்.
உன் கூந்தலில் அதைச்சூடி
உயிரில் வெளிச்சம் காண்பேன்.

உன் வியர்வைத் துடைக்க
வானக் கைக்குட்டை தருவேன்.
உன் வளையல் நிறங்கண்டு
வானவில் நாணிப் போனதே!

நீ கிறுக்கி எறிந்த
காகிதம் கவிதை நூலகமானது.
நீ பிதற்றிய வார்த்தைகள்
தத்துவமாக உலவி வரும்.

இலக்கணம் அறியா இளைஞனை
இலக்கியம் எழுதத் தூண்டாதே!
தலைக்கணம் அறியாத் தமிழனை
தன்னலம் கொள்ளச் செய்யாதே!

அஹிம்சை காரியே உயிர்
கொல்லல் பாவம் தெரியாதா?
இம்சை செய்யும் விழிக்கு
விடுதலை என்பது புரியாதா?

Wednesday, September 24, 2008

என் காதல்


கட்டி அணைப்பதற்கும்,
திட்டி தீர்ப்பதற்குமே,
என் காதல் பாதி
தீர்ந்து விடுகிறது.

மிச்சம் இருக்கும்
காதல் ஊடலுக்கும்
தேடலுக்கும் உதிர்ந்து
விடுகிறது.

நத்தை சுமக்கும் கூடுபோல்
எப்போதும் காதலைத் தூக்கிச்
சுமக்கிறேன்.
பாரமென முன்பு
எண்ணியது இப்போது
பழகி விடுகிறது.

முதல்முறை பார்த்து
குரைக்கும் நாய்,
பிறகு வரும் சந்திப்புகளில்
வாலை குழைத்து
கொஞ்சுவதுபோல் தான்
என் காதலும்
என்னை கொஞ்சுகிறது.

எனக்கான காதலை
நீயும்,
உனக்கான காதலை
நானும்,
தத்து எடுத்துக்
கொள்ளும் வேளைகளில்
யாருடையது எனத்
தெரியாமல் குழம்பிப்
போகிறது என் காதல்.


விரிசல்களையும்
விரசங்களையும்
தாண்டி அது வேர்விடுகிறது.
பார்வைகளும்
தவிப்புகளும் நீராய்
அமைந்து அதை வள்ர்த்து
விடுகின்றன.

அறுவெறுப்பான பொருள்களிலும்
அழகைத் தேடி ஆராதிக்கிறது
என் காதல்.

உன்னை புண்படுத்தி
விட்டுத் தனியாக
அமர்ந்து அழும் வேளைகளில்
கேலியாய் என்னைப் பார்த்து
சிரிக்கிறது என் காதல்.

காரணம் இன்றி
சிலநேரம் காத்திருக்கும்
பொழுதுகளில் கோபமாய்
முறைக்கிறது என் காதல்.

ஒவ்வொரு முறை
நான் தொலைவதும்,
என்னைக் கண்டுபிடித்து
தருவதுமாய் எனக்கும்
என் காதலுக்கும்
இடையேயான கண்ணாமூச்சி
களைகட்டுகிறது.

நள்ளிரவுகூடத் தெரியாமல்
உன் ஞாபகத்தில்
காலத்தோடு கரையும்
நாள்களில் நமக்கான
நிகழ்வுகளை எடுத்துத்
தருகிறது என் காதல்.

அயர்ந்து தூங்கும்
அதிகாலைகளில் துயிலாமல்
விழித்து இருந்து என்னை
எழுப்புகிறது என் காதல்.

உனக்காக கவிதை
எழுதும் களிப்பான
தருணங்களில் கதவருகே
அமர்ந்து வார்த்தைகளுக்கு
வழிகாட்டுகிறது என் காதல்.

என் காதலே நான்
உன்னை என்ன செய்ய?
நீ தான் என்னை
ஏதேதோ செய்து
கொண்டிருக்கிறாய்.

என் காதலே உன்னையும்
நான் காதலிக்கிறேன்.

Tuesday, September 23, 2008

நீ நான் நாம்


விடியல் பூத்த வானமே,
உன்னில் விடியாமல்
மறைந்திருக்கும் விண்மீன்
நான்.

என் பகலினில்
பதுங்கி இருந்து
இரவுகளில் நடமாடும்
இயந்திரவியல் பூ நீ.

எனக்கான கடிகாரத்தில்
ஓடாமல் காத்திருக்கும்
காலத்தின் கடிவாளம் நீ.

உனக்கான நாள்குறிப்பில்
உருளாமல் உனக்காக
உட்கார்ந்து இருக்கும்
நேரத்தின் நீர்த்திவலை நான்.

நிழலாய் போகும் வாழ்வில்
நிஜமாய் நிற்கும்
நினைவு நீ.

நிஜமெனத் தோன்றும்
நிழலில் கரையும்
கனவு நான்.

Monday, September 22, 2008

அலைகளுக்கும் உன்மேல் கரிசனம்


கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதி
வைத்தேன்.

அலைதொட மறுத்தது.
அழகான கவிதை
அழிந்துவிடக் கூடாதென்று.