Friday, November 14, 2008

காதலித்துப் பார்


எப்போதுமே சலிப்பு தராத ஒரே விஷயம் காதல் தான்.அதை பற்றி எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பேசலாம். மனிதனை மிருகமாக்குவதும், மிருகத்தை மனிதனாக்குவதும் காதல் மட்டும் தான்.எத்தனையோ யுகங்கள் கடந்தாலும் இன்றும் இளமையாய் இருக்கும் விஷயங்களில் காதலும் ஒன்று. மறத்துப் போன இதயங்களைக் கூட பூக்கச் செய்யும் .

நடுநிசியிலும் எழுந்து கவிதை எழுதச் சொல்லும்.சுடும் வெயிலையும் நின்று ரசிக்கச் செய்யும்.நம்மை எதிரியாக நினைப்பவனை கூட நட்பாக பேசச் செய்யும்.அது செய்யாத மாற்றங்களே இல்லை.காதல் ஒரு அழகான கவிதை.அந்த கவிதையை அனுபவிக்காவிட்டால் வாழ்க்கை வீண். அது ஒரு இதமான தென்றல். உள்ளேச் சென்று நுரையீரலைத் தொட்டு வெளியேப் போகும்போது வெப்ப மூச்சாகச் சென்றுவிடும்.ஒரு கூட்டமே பெருமழையைப் பார்த்து ஒதுங்கி போகும் போது நமக்கும் மட்டும் முழுதும் நனையத் தோன்றும். யாருமே நம்மை கவனிக்காவிட்டாலும் எல்லோரும் நம்மைப் பார்ப்பதாகத் தோன்றும்.தனக்குத் தானே பேசிக் கொள்வது, சின்னக் குழந்தைங்கள் அருகில் போய், அதன் தலையைக் கோதுவது, பட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து கொஞ்சுவது எனக் காதலின் சேட்டைகள் நீள்கிறது. காதல் ஒரு இன்பமான நோய். வலியா சுகமா எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு உணர்வு.

நமக்காக ஓருயிர் தவிக்கும் போது நாம் படும் வலிக்கு அளவே இல்லை. நம்மோடு பேச,அழ,சிரிக்க, ரசிக்க,அதட்ட, மிரட்ட,கொஞ்ச,கெஞ்ச,திட்ட ஒருத்தர் எப்போதுமே இருக்கும் சந்தோஷம் பணம் பணம் எனத் திரிந்து வெளிநாடுகளை நோக்கி ஓடுபர்களுக்கு கிடைக்குமா தெரியாது.காதல் ஒரு அழகான ஆரம்பம்.ஏதோ நேற்று தான் இந்த உலகத்தில் பிறந்த மாதிரி இருக்கும். பார்த்து பழகிய பலவற்றிலும் புதியது தெரியும்.அது ஒரு சொல்ல முடியாத ரகசியம். ஒலி மறந்து போன இசை.வார்த்தைகள் இல்லாத கவிதை. வண்ணம் இல்லாத ஓவியம். காட்சிகள் இல்லாத நாடகம்.காத்திருப்பதில் கூட ஒரு சுகத்தை சொல்லிக் கொடுத்தது காதல் தான்.மீண்டும் மழலைக் காலத்திற்கே கொண்டுபோய் எல்லாவற்றையும் கொண்டாட வைக்கும்.காதல் இனிக்கின்ற கடல்.இறவாத ஈசல்.வாசலில் நிற்கும் சூரியன்.உள்ளங்கையில் அடங்கும் நிலா.

யாருக்காகவாவது நீங்கள் கதறி அழுது இருக்கீங்களா?யார் தோள் மேலாவது சாய்ந்து உங்கள் ஆசைகளை சொல்லி இருக்கீங்களா?யாராவது நலமாக இருக்க வேண்டுமென கோவிலில் வேண்டி இருக்கீங்களா? அப்படி என்றால் நீங்கள் யாரையோ காதலிக்கிறீங்க என அர்த்தம்.உங்களுக்காக யாரோ எங்கேயோ காத்துகிட்டு இருப்பாங்க.நீங்களும் காத்திருங்கள் என்னைப் போலவே.காதலில் நனைய.காதலோடு இணைய.காதல் ஒரு புனிதமான விஷயம்.காதலிங்க. உங்க மனம் கோவிலாவதை நீங்க உணர்வீங்க.