
பேராழி தாண்டி வந்தாலும்
உயிராவி உன்னில் கிடக்கிறது.
நலம்தானா உயிரே!
காண அழகாய் கோடியிடங்கள்
இருந்தாலும் உன் கண்கள்
காணத் துடிக்குதடி விழியே!
உன் அருகாமையில்அமர்ந்து
உன் சுவாசம் ருசித்த நாசிகள்
இன்று ஈரக்காற்றில் உன்
முகவ்ரி தேடுதடி.
உனக்கு மட்டுமே குறுஞ்செய்தி
அனுப்பிய அலைபேசி இன்று
உயிரற்று பெட்டியில் உறங்கித்
தவிக்கிறது சகியே!
உன் பெயரைத் தாங்கிய
உள்ளங்கை காயம் இன்று
தழும்பாய் மாறி மறைந்த
கதை அறிவாயா தோழி.
உன் நினைவில் உறைந்து
உறக்கம் தழுவிய பல
இரவுகளில் சில இங்கேயும்
செலவழிந்தது புரியுமா
நீ சாய்ந்த தோள்கள்
நீயின்றி கனக்குதடி.
நீ இல்லாத நாள்கள்
நகர மறுக்குதடி.
உனக்காகவே உயிர்
தாங்கி உனக்காகவே
உயிர் நீங்கி மறைய
எனக்கு ஆசையடி.
No comments:
Post a Comment