
உன்னை காயப்படுத்தும்
எந்த செயலும் என்னை
இருமடங்கு வருத்தும்.
நாள்கள் சிலகடந்தாலும்
என் நெஞ்சையது
மெதுவாய் உறுத்தும்.
உன் தோழிகள்
என் சோதரிகள்.
இதயத்திற்குத் தெரியும்.
நரம்பில்லாத நாவிற்குத்
தெரிவதில்லை.
சிலசமயம் எல்லை
மீறுகின்றன.
தனிமையில் புலம்பித்
தொல்லைத் தருகின்றன.
மன்னிப்புக் கேட்டால்
மனம் ஆறிவிடுமா?
நீபடும் துயரைத்தான்
கூறிவிடுமா?
என் உயிராய்
உயிர்த்து இருக்கும்
தேவதையே!
நீ புண்படும் வேளைகளில்
உதிர்கிறேன்.
உன் கூந்தல்
பூக்களைப் போல்.
உன் நினைவுகளே
என்னை படலாமாய்
சூழும்போது உன்
நிழற்படம் எதற்கம்மா
எனக்கு?
உன் புன்னகையை
என்றும் வேண்டுகிறேன்.
அது கடவுள் எனக்காக
அனுப்பி வைத்த
கவின்மிகு ஓவியம்.
எல்லாம் மறந்து
கொஞ்சம் சிரி.
நான் உலகத்தையே
மறந்து சிலநொடி
உயிர் வாழ்கிறேன்.
No comments:
Post a Comment