
உன் சுட்டுவிரல் தொட்டுவிட
சூரியக் கதிர்கள் துடிக்கும்.
உன் பட்டுஇதழ் பட்டுவிட
பருவ மலர்கள் வெடிக்கும்.
புல்லின் தாகம் தீர்க்கும்
பனித்துளி உன் பருவோ?
அழகின் மோகம் கூட்டும்
பால்நிலா உன் உருவோ?
அழகே ஏய் அழகே
அடக்கி வைத்த அழகே!
மின்னல் கூட்டம் சேர்த்து
மின்மினிப் பூச்சிகள் செய்வேன்.
உன் கூந்தலில் அதைச்சூடி
உயிரில் வெளிச்சம் காண்பேன்.
உன் வியர்வைத் துடைக்க
வானக் கைக்குட்டை தருவேன்.
உன் வளையல் நிறங்கண்டு
வானவில் நாணிப் போனதே!
நீ கிறுக்கி எறிந்த
காகிதம் கவிதை நூலகமானது.
நீ பிதற்றிய வார்த்தைகள்
தத்துவமாக உலவி வரும்.
இலக்கணம் அறியா இளைஞனை
இலக்கியம் எழுதத் தூண்டாதே!
தலைக்கணம் அறியாத் தமிழனை
தன்னலம் கொள்ளச் செய்யாதே!
அஹிம்சை காரியே உயிர்
கொல்லல் பாவம் தெரியாதா?
இம்சை செய்யும் விழிக்கு
விடுதலை என்பது புரியாதா?
No comments:
Post a Comment