இருட்டாய் கிடக்கிறது
நான் வசிக்கும் அறை.
முதன்முதலாய் சாளரம்
திறந்து வைக்கிறாய்.
வெளிச்சக் கீற்றுகள்
இருட்டை விழுங்கி
தன்முகத்தை அறைக்குத்
தந்துவிடுகின்றன.
எனக்குள் கிடந்த
இருளை உன் புன்னகை
மென்று தின்றதைப் போல்.
காலைத் தென்றல் இதமாய்
இதயத்தை வருடி விடுகிறது.
நாசித் துளைகள் இந்த
நாளில் நன்றியைப் பெறுகின்றன.
"இத்தனை நாளாய் இதை
எல்லாம் இழந்து வாழ்ந்து
இருந்திருக்கிறேனே!
நீ முன்பே வந்து
இருக்கலாம்." என்றேன்.
சிரித்துக் கொண்டே
சலனமின்றிச் சொன்னாய்.
"ஒளியின் இனிமை
இருள் கொடுத்ததுதான்"
மெதுவாக உணர்கிறேன்.
உன் துணையின் பெருமையும்
என் தனிமைகள் தந்தவைதான்.
No comments:
Post a Comment