Thursday, December 04, 2008

நீ வரும் நாளுக்காக



உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிடு.

என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிடு.

என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிடு.

விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிடு.

உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிடு.

கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிடு.

மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிடு.

நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிடு.

உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!

எப்போதடி வரப் போகிறாய்?

அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய.

Tuesday, December 02, 2008

தேடல்


உனக்கான என் தேடலில்
முதன்முதலாய் தொலைந்தவன்
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு என்னையும்.

காலம் மறைத்து வைத்த
உன்னைக் கண்கள் கண்டறிந்த
சமயம் உன்னிடத்தில் காதல்
இருக்கவில்லை.

யுகங்களாய் சேமித்தக் காதல்
நொடிப் பொழுதில் கரைவது
தெரிந்ததால் நான் உண்மை
மறைக்கவில்லை.

தொடமுடியா தூரத்தில் தெரியும்
மாலைப் பரிதியின் மயக்கும்
பிம்பம் ரசிக்கும் நீ உன்
அருகாமையில் என் நேசத்தை
உணராமல் போவது இன்றும்
எனக்கு வியப்பே!

கட்டிப் போடுவதற்கு காதல்
உன் வீட்டு நாய்க்குட்டி அல்ல.
வெட்டி விடுவதற்கு காதல்
களைச் செடியும் அல்ல.

உன் மௌனம் தாண்டி
ஒருநாள் காதல் வெளிவரும்.

காத்திருக்கிறேன் கண்மணி.

காடு


காரிருள் குடைந்த
காடுகளின் காதுகளின்
ஊதும் புல்லாங்குழல்
வண்டுகளின் துளைகள்.

கதிரவனைக் கூட
அனுமதிக்காத காடுகள்
எப்படியோ காற்றை மட்டும்
அனுமதிக்கின்றன!

அச்சமா துணிச்சலா
தெரியாமல் கூவுகின்றன.
குயில் குஞ்சுகள்.

அச்சம்தான் என
உறுதிப் படுத்தி
பிளிறுகின்றன களிறுகள்.

படபடப்பில் துடிப்பதை
கொஞ்சம் நிறுத்தி
வைக்கின்றன மெல்லின
மாக்களின் இதயங்கள்.

திடீர் நிசப்தம்.
மொட்டுகள் அவிழும்
ஓசையைத் தவிர எதுவும்
காதிற்கு எட்டுவதில்லை.

காடுகள்கூட கவிதைகள்
தான் கண்விடுத்து
கருத்தால் காண்கையில்.

அம்மா


கருவறை என்னும்
இருட்டறையில் நான்
கண்ணயர்ந்த போது
உயிரினை ஒளியாய்
உள்ளே ஊற்றிய
தெய்வம் நீ.

நான் மண்ணில்
பிரசவித்த போது,
உன் வலியையும்
வசீகரமாய் மாற்றி
புன்னகைத்தாய்.

நீ என்னைக் காற்றில்
தூக்கி எறியும்
போதெல்லாம்
பயமின்றி சிரிப்பேனே!

ஏனம்மா? வீசி எறிந்த
கரங்கள் உனதென்பதால்.

நான் நடைபழகும்
நாள்களில் விழும்
வேளைகளில் தரையாக
தாயே நீதான் தாங்கிக்
கொண்டாய்.

மண்ணெடுத்து உண்கையில்
நீ பார்க்கும் போது,
அடிப்பாயோ என்று விழி
மூடும் நேரங்களில்
மார்போடு அள்ளி
அணைத்து கொஞ்சுவாயே.
நீ எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டவள் தான்.

நான் மொழியின்றி
பிதற்றும் பருவங்களில்,
"அம்மா சொல்லுடா"
எனக் கெஞ்சுவாயே
இப்போதும் சொல்லத்
துடிக்கிறேனம்மா.

விரதங்களால் என்னுயிர்
வளர்த்தாய்.
வாழ்க்கையையே எனக்காக
அர்ப்பணித்தாய்.

இன்னொரு பிறவியிலாவது
உன் தாயாய் நான்
பிறந்து உன்கடன் தீர்க்க
ஓர் வரம் வேண்டும்.

நீ நூறாண்டுகள் வாழ,
உன் மடியில் நான்
ஒரு மழலையாகி
என்றும் தூங்க
இறைவனை வேண்டுகிறேன்.

வேய்குழல்


என்னை என்ன
செய்தாய் வேய்குழலே,
உன் நாதத்திலே வரும்
கீதத்திலே நெஞ்சம்
மோட்சம் பெறுகிறதே.

இதழ் ஓரம் நீ ஈரப்
படுத்தி இசைக்கின்ற
கானங்கள் என் செவியிருக்கும்.

இதயத்தை நீ வருத்தி
பிறக்கின்ற இசை எல்லாம்
என்னுயிர் குடிக்கும்.

வண்டுகள் துளைப்பதைத்
தாங்கிக் கொண்ட நீ
என் முச்சுக் காற்றை
சுமப்பதையா வலி என்கிறாய்.

ஆயிரம் கண்கள்
கொண்டு என்னை நீ
காண்கையில் என் விழிகள்
காதல் வயப்படும்.

கவிதை வாசித்த உன்
கண்கள் கண்ணீர் வடிக்கையில்
உன்னை சுமந்த மனம்
ஏனோ பயப்படும்.

விரலிடை உன்னைப்
பதுக்கி உதட்டினில் சூடேற்றி,
ஒரு முறையேனும் என்
சுவாசத்தை இசையாக்க
அனுமதி தா.

காமத்தைக் கடந்து
கரங்களில் உருள்வாயோ,
இரேகைகள் அழிய
தேகங்கள் தொலைப்பாயோ,

நான் என்னும் கர்வம்
அழியும் படி சிறுசிறு
நாணங்கள் புரிகின்றாய்.

தான் என்னும் நிலை
கடந்து ஊடுருவுகையில்
நீயே தெரிகின்றாய்.

என்னை என்ன
செய்தாய் வேய்குழலே?
என்னிடத்தில் நானில்லை.

என்ன செய்வாய்


இருட்டிலும் என்னை
நிழலாய் தொடர்கின்றது
உனது நினைவுகள்.

இமைக்குள் பதுக்கி
வைத்தாலும் வழிகிறாய்
என் கண்ணீராய்.

கூட்டத்தை வெறுக்கிறேன்.
தனிமையில் இருக்கிறேன்.
சிறு காகிதம்
கண்டாலும் கவிதைகள்
கிறுக்குகிறேன்.

ஏனடி இந்த
மாற்றம்?
புரியாமல்
கிடக்கிறேன்.
என் நிலை
நான் மறந்து
எங்கேயோ நடக்கிறேன்.


பூக்களையே
ரசிக்க தெரியாதவன்.
இன்று புழுக்களை
கூட ரசிக்கிறேன்.
உன் நினைவுகள்
உடன் இருப்பதால்
மண்ணை கூட
அமுதென புசிக்கிறேன்.

என்னை என்ன
செய்ய போகிறாய்?
வாழ்வது ஆனாலும்
சாவது ஆனாலும்
உன் அருகாமையில்
அது நிகழட்டும்

நீ இருப்பதால்


தடுமாறும்
நேரங்களில்
தடமாக
நீ இருந்தாய்.

காய பட்டு
நிற்கையில் உன்
நட்பே எனக்கு
மருந்தாய்.

நான் பேசினாலும்
ஏசினாலும் ஏசு
போலவே பொறுமை
காத்தாய்.

உன் வெற்றிகளை
எல்லாம் என்
வெற்றியாகவே
பெருமை பூததேன்.

அகராதியில்
நட்பென்னும் வார்த்தைக்கு
பொருளாய் உன்
பெயரை பொறிக்கலாம்.

நீ உடன்
இருந்தால் இதயத்தை
அன்பால் நிறைக்கலாம்.


உனக்காக நான்
செலவழித்த
கண்ணீரை நீ
அறிவாய்.

ஒவ்வொரு விடியலிலும்
உன்முகத்தில் நான்
விழித்த நேரங்கள்
பெரிதாய்.

நோய்வாய் பட்டு
நீ விழுந்தாய்.
நோன்புகள் பல
நான் இருந்தேன்.

தாயாய் சேயாய்
நீ வரவே
தவங்கள் பல
நான் புரிந்தேன்.

தவறு ஏதும்
புரியாமல் உன்னோடு
பேசாமல் நான்
கிடந்தேன்.

எதிரே உன்னை
கண்டாலும் வேறு
திசையில் நான்
நடந்தேன்.


அன்று

கண்ணீர் துடைக்க
நீ இருந்தாய்.

உன் வருகைக்கு
பின் அழுவதற்கு
காரணமும் அழிந்து
போனது.

நீ இருக்கும்
காரணத்தால் சோகமும்
சந்தோஷம் ஆனது.

நமக்கு பிரிவு
மரணத்தில் மட்டுமே.

மரித்த கவிதை


குழந்தையை எடுத்து
கொஞ்சும் போது
அதன் இதழ்
ஓரம் தெறிக்கும்
எச்சிலாய்
என்னை ஒவ்வொரு
முறையும்
ஈரப்படூத்துகிறது
உன் நினைவுகளும்.

செவிடாய் கிடக்கும்
என் செவிகளில்
புல்லாங்குழல்
வாசித்து ஓடுகிறாய்.
இசையா இரைச்சலா
என புரியாமல்
நானோ உன்னை
தேடுகிறேன்.

நீ இலக்கண
கிருமி.
உன்னை கண்டால்
கவிதை நோய்
எனக்கு தோற்றிடும்.
மருந்தாய் எதை
தருவாய்?
சாவையா?
வாழ்வையா?

உன்
நெற்றி போட்டு,
ஒற்றை சடை,
கற்றை கூந்தல்,
தெற்று பல்
இவற்றிற்கு எல்லாம்
தமிழில் இலக்கணம்
இல்லை என்று
தலை கணத்தில்
திரியாதே!

தமிழ் உன்னால்
போதை ஏறி
கிடக்கிறது.
கொஞ்சம் பாதை
மாறி நடக்கிறது.
நான் என்ன செய்ய?

ஒட்டு மொத்த
அன்பையும் உனக்காக
தேக்கி வைத்து
இருக்கிறேன்.
கொஞ்சமாவது அதில்
மூழ்கி விட்டு
போ.
என் அன்பெனும்
கங்கை நதி
புனிதம் அடையட்டும்.

நீ என்னை
பிரியும் போதே
கவிதைகளும்
மரித்து விட்டன.

இதோ இங்கே
கூடி கிடப்பது
எழுத்து பிணங்கள்
மட்டுமே.

Monday, December 01, 2008

பேராசை


வாழ்க்கை தரும்
என நினைத்த
உன் முகம்
தான் இன்று
வலியையும்
தருகிறது.


நீ உடன்
இல்லை என
உணரும் போது
என் நிழலுக்கும்
வலிக்கிறது.

வரமாய் மனைவி
வாய்க்க வேண்டும்
என சிலர்
நினைப்பது இயல்பு.

ஆனால்
வரமே மனைவியாய்
வர வேண்டும்
என நான்
நினைப்பது
கொஞ்சம் பேராசை
தான்.

இருந்தாலும்
அதை
நிறைவேற்றி விடு.

Wednesday, November 26, 2008

அன்பே


விழியசைவில் ஒரு
விளம்பரமா?
அதை வாங்கிட
என்னுயிர் வருமா?

உன் விரல்நுனியில்
புது சுயம்வரமா?
என்னை மணந்திட
தேவதை வரம்தருமா?

தூரத்தில் நின்றுப் பார்த்து
தூரல்கள் தெறிக்கிறாய்.
அருகில் வந்து நின்று
அடைமழை பொழிகிறாய்.

உன் நிழல் தீண்டும்
வேளையில் என்
விரதங்கள் தீருதடி.

என் தனிமையில்
உன் நினைவுகள்
கவிதைகள் கூறுதடி.

யாரும் நடக்காத
ஒற்றையடிப் பாதை
எனக்குள் ஓர் ஊர்வலம்
நடத்திப் போகிறாய்.

நிழலும் பிரிகின்ற
வேளையில் நீயே
உயிராகிப் போகிறாய்.

அடுத்தப் பிறவியில்
நம்பிக்கை இல்லை.

பெண்ணே,

இருந்து விடு
என்னுடன்.
இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை.

கவிதை வரவில்லையடி


கவிதை வரவில்லையடி.

உன்னை காணும் போதும், நீ
நாணும் போதும் உயிரோடு
ஒட்டிக் கொண்டநேசம்
இருந்தும் கவிதை வரவில்லையடி.

வானத்தை வெறித்துப் பார்க்கையில்
நீரலைகளின் வெற்றிடத்தை நிரப்புகையில்
தோன்றிய தேவதையுன் முகம்
உடனிருந்தும் கவிதை வரவில்லையடி.

முழுநிலா என்னை முறைக்க,
காகிதங்கள் காற்றில் துடிக்க,
பேனாமுனை கரம் பிடித்தும்
பேரழகே கவிதை வரவில்லையடி.

ஆயிரம் பாவணைகள் உன்
அழகு முகம் தோற்றுவிக்க,
நான் தோற்று நிற்கும்
தருணமும் கவிதை வரவில்லையடி.

கவிதையே கவிதையை
என்ன செய்தாய்?
கவிதை வரவில்லையடி.

Monday, November 24, 2008

யாருக்கு ஐந்தறிவு


யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.

கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.

எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

அயல்நாட்டு பயணம்


பனிமழையில் விடிகிறது
என் நாள்கள்.
உயிர் வலிக்கும்
சுவாசம் கொள்கிறேன்.

வாழவேண்டும் அதனால்
வலியைக் கொல்கிறேன்.

உறக்கம் முழுதாய்
தொலையும் முன்னே
ஊர்தி ஏறி அலுவலகம்
அடைகிறேன்.

மொழி புரியா
அயல்நாட்டவன் தான்
ஆசானாம்.
எனக்கும் அவனுக்கும்
பொதுவான ஓர்
மொழி மெளனம்தான்.

மெளனம் புரிந்துக்
கொள்ள இது ஒன்றும்
காதல் அல்ல.

எனக்கும் அவனுக்கும்
பொதுவாய் ஒரு
புதுமொழி பிறக்கிறது.

அவன் விளக்கங்கள்
எனக்கும், என்
சந்தேகங்கள் அவனுக்கும்
புரிவதேயில்லை.

நங்கை நினைவுகள்
நெஞ்சில் நகர்வதால்,
அடிக்கடி என்னுலகம்
சென்று இவ்வுலகம்
வருகிறேன்.
காதல் இதயத்தை
கடிக்க கடிக்க
கவிதைகள் தருகிறேன்.

பணம் அறிவு
பதவி எல்லாம்
தாண்டி காதல்
வென்று விடுகிறது.

என் அகந்தை
ஆணவம் அனைத்தையும்
அவள் பெண்மை
கொன்று விடுகிறது.

வாழமட்டுமே ஆசை.
அதனால் வஞ்சியின்
வதனம் வாழ்நாள்
முழுதும் உடன்வரும்
என உள்மனம்
உரைக்க உருள்கிறது
ஒவ்வொரு நாளும்
நொடியாக.

என்னோடு வா


இமைகள் பிரியாது
உறக்கம் கலையாது
காட்சிகள் எப்படி நீ
கொடுத்தாய்?

அருகில் இல்லாமல்
அன்பையும் சொல்லாமல்
எனக்குள் எப்படி நீ
கிடைத்தாய்?


உலகோடு வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே!
உன்னோடு வாழும் வாழ்க்கை
அது போதும் கண்ணே!
என்னுலகம் நீதானே!
என்னுயிரும் நீதானே!


நிழலாக கிடந்தேன் உயிரே
என்னை நிஜமாக்கி சென்றாயே!
இன்று என்னை நெருங்காமல்
அணுஅணுவாய் கொன்றாயே!

யாரோடும் செல்லா மனம்
இன்று உன் பின்னால்
ஓடி ஒளிந்து கொள்ளுதடி.
அதைத் திருப்பித் தராமல்
நீயே வைத்துக் கொள்ளடி.

என்தமிழ் கூறும் வார்த்தைகள்
எல்லாம் உன்னைப் பாடும்.
என்விழிகள் மட்டும் ஏனோ
உன் வதனம் தேடும்.

இம்மண்ணில் ஏன் பிறந்தேன்.
உன்னில் தொலைந்திடவோ
உன்கண்ணில் ஏன் விழுந்தேன்?
உன்னில் கரைந்திடவா?


என்னோடு இதுவரை
என் நிழல் மட்டுமே
உடன் வந்தது.

முதன்முறை உடன்
வர உன்னை கேட்கிறேன்.
வருவாயா என்
வாழ்வின் துணையே!

மகரந்தம் சேர்க்கும்
பூவாய் என் காதலையும்
சேர்த்து வைக்கிறேன்.

ஒரு வண்டாக வந்து
அதைக் குடிக்க மாட்டாயா?

வண்ணத்துப் பூச்சியும்
வயல்தொடும் தென்றலும்
நம்மைப் பற்றி கதைகள்
பேசிக் கொள்ளுதே!

காதைக் கொடுத்து
அதை நீ கேட்டாயா?

உனக்கான பாதையில் எல்லாம்
பெண்ணே நான்தானே
பாதம் தாங்கும் மண்ணாய்
இடம் பெயர்கிறேன்.

உன் பார்வையை
மெளனத்தை கவிதையாய்
என்றும் மொழி பெயர்க்கிறேன்.

Tuesday, November 18, 2008

உயிரே நலமா



பேராழி தாண்டி வந்தாலும்
உயிராவி உன்னில் கிடக்கிறது.
நலம்தானா உயிரே!

காண அழகாய் கோடியிடங்கள்
இருந்தாலும் உன் கண்கள்
காணத் துடிக்குதடி விழியே!

உன் அருகாமையில்அமர்ந்து
உன் சுவாசம் ருசித்த நாசிகள்
இன்று ஈரக்காற்றில் உன்
முகவ்ரி தேடுதடி.

உனக்கு மட்டுமே குறுஞ்செய்தி
அனுப்பிய அலைபேசி இன்று
உயிரற்று பெட்டியில் உறங்கித்
தவிக்கிறது சகியே!

உன் பெயரைத் தாங்கிய
உள்ளங்கை காயம் இன்று
தழும்பாய் மாறி மறைந்த
கதை அறிவாயா தோழி.

உன் நினைவில் உறைந்து
உறக்கம் தழுவிய பல
இரவுகளில் சில இங்கேயும்
செலவழிந்தது புரியுமா

நீ சாய்ந்த தோள்கள்
நீயின்றி கனக்குதடி.
நீ இல்லாத நாள்கள்
நகர மறுக்குதடி.

உனக்காகவே உயிர்
தாங்கி உனக்காகவே
உயிர் நீங்கி மறைய
எனக்கு ஆசையடி.

Friday, November 14, 2008

நகரும் வானவில்



நீ சிரிக்கும் நேரங்களில்
என் சிலுவைக்கும்
சிறகு முளைக்கிறது.

வானத்தை தேடி மனம்
வண்டாய் பறக்கிறது.

நேற்றுவரை என்
தலைக்குமேல் திரிந்த
வானம் இன்று தரையோடு
கிடந்து தவிக்கிறது.

உன் நினைவுகள் வானத்தை
வசப்படுத்தி இடம்
பெயர்கின்றன.

நான் நடக்கும்
பாதைகளில்
என்னைப் பார்த்து
திரும்பிக் கொள்ளும்
பூக்கள் உன்னோடு
வருகையில்
புன்னகைக்கின்றன.

வானம் பூத்த பூமி
இப்போது உன் வதனம்
பார்க்க பழகிக் கொள்கிறது.

விளையாமல் மழைக்காக
காத்து கிடந்த பயிர்கள்
யாவும் உன் புன்னகையில்
விளையக் கற்றுக்
கொள்கின்றன.

பாலைவனம் கூட
நீ நடக்கையில்
வெம்மையை உண்டு
விட்டு தண்மையை
உமிழ்கின்றன.

நீ அன்பு வழிந்து
நிற்கும் அட்சயப்
பாத்திரம்.

நான் உன்மடியில்
தவழ்ந்து உனக்குள்
அமிழ காத்திருக்கும்
காலத்தின் முடிவிலி.

பலகோடி ஆண்டுகள்
பழகிவரும் வானும்
மண்ணும் நம்மைப்
பார்த்து வியக்கின்றன.

கண் படப்போகிறது.
வைத்துக் கொள்ளடி.
என் உதிரத்தால்
ஒரு திருஷ்டிப்
பொட்டு.

வானில் சில நட்சத்திரங்கள்


வானில் சில நட்சத்திரங்கள்.
நீ உற்று நோக்குகிறாய்.
வானம் இன்னும் வெளிச்சமாகிறது.

எங்கோ ஒரு மூலையில்
நீ பார்ப்பதை சொல்லி
அனுப்புகின்றன.
காற்றுக் கற்றைகள்.

உன் விழியலைகள் என்
விரல்களைப் பிடித்துகூட்டி
செல்கின்றன.

நீ ரசிப்பதை நானும்
ரசிக்க.

மலையின் உச்சியில்
அமர்ந்து வானத்தைப்
பார்க்கிறேன்.

மேகங்கள் ஒன்றுகூடி
உன் முகத்தை தோற்றுவித்து
என்னை தோற்கடிக்கின்றன.

என் காதுகளை
செவிடாக்கி,
உன் நினைவும்
என் நினைவும் தனியாக
பிரிந்துச் சென்று
உரையாடிக் கொள்கின்றன.

நீ சூடி எறிந்த
ஒற்றை ரோஜா
பேருருவம் எடுத்து
கண்முன் உதிக்கிறது.

மலர்மணம் வீசும்
மல்லிகை கூந்தலும்,
விரலோடு சிக்கி
உடையும் குழலும்,
நினைவில் வருகின்றன.

தேவதையே என்
பிரிவின் வேதனை
உனக்கும் இருக்குமோ?

எங்கு போவேன்?


உன் விழிகள் தான்டி
பெண்ணே நான் எங்கு
போவேன்?
உன் விரல்கள் தீண்டாமல்
கண்ணே நான் என்ன
ஆவேன்?
என் நினைவுலகில்
நீராடும் தேவதை,
தாங்குமோ உன்
நினைவில் சாவதை.

தாமரைப் பூத்திருக்கும்
தடாகம் இந்த தண்ணீரைக்
கொஞ்சம் ஏந்துமா?
விழிகளாய் வாழும் கயல்கள்
இரண்டு என் இதயக்
குளத்தில் நீந்துமா?


வார்த்தைகள் எதுவுமின்றி
அருகில் வருவேன்.
உன் விழிகள் பேசுவதால்
ஊமையாகி விடுகிறேன்
உதிர்ந்து போன
உரையாடலால்.

தூக்கமில்லாத இரவுகளும்
தேதி தெரியாத நாள்களும்
உன் நினைவுகள் துப்பி
விட்டுச் சென்றவை தான்.

எனக்கானவை என நான்
நினைத்திருந்த எல்லாமும்
சிதைந்து போகின்றன
நீயென் முன் சிரிக்கையில்.

துண்டு துண்டாய்
உடைந்தவற்றை சேகரித்து
முடிக்கும் போது மறுபடியும்
சின்னா பின்னமாக்கிப்
போகிறது உன் புன்னகை.

இப்போது

நினைப்பதற்கும்
இணைப்பதற்கும்

எதுவும் இல்லை
உன்னைத் தவிர.

வாழவைத்துப் போ


இது பிழையா
இல்லை சரியா
உன் விழிதனில்
வந்து மாட்டிக்
கொண்டேன்.

இது நிரந்தரமா
இல்லை நின்றிடுமா
உன்னில் என்
வாழ்வை நான்
கண்டேன்.

போர்க் களம் காணும்
வீரனைப் போல் நாணும்
உன்விழி காண்கையில்
நாளும் பெருமிதமே!

தீக்குளத்தில் என்னை
எறிந்தாலும் திங்கள்
உன் தாய்மையின் சேய்மை
எனக்கு தருமிதமே!

கல்லறையில் பிணத்தின்
மேல் இருந்த பூவென்னை,
கருவறையில் கடவுளின்
மேல் மிதக்க விட்டாய்.

முள்களின் ரத்த வாசம்
மட்டுமே நுகர்ந்த என்னை,
முதல் முறை பெண்மையின்
வாசம் அறிய வைத்தாய்.

யாரோ என்றே
நானிருந்தேன்.
நீதான் அதுவென
உணர்த்தி விட்டாய்.

காற்றில் வெடித்து
சித்றும் பஞ்சாக
நெஞ்சு வெடித்து
பறக்கிறது.

பெண்ணே ஒரு
தும்பியை பிடிப்பது
போல் அதை நீயும்
கொஞ்சம் துரத்திப்
பிடித்துக் கொள்.

ஆள்காட்டி விரலும்
உன்னை அன்றி
வேறொருவரை
காட்டுவதில்லை.

உயிர் மீட்டி உடல்
வாட்டி விழி பாராமல்
செல்பவளே!

ஒரு தடவை என்
ஆவி தடவி போ.
உயிர் மேவிப்
பயனடையும்

காதல்


உன்னை எழுத்தில் வடிப்பது
சிலசமயம் இயலாத காரியம்.

நீ இலக்கணங்களுக்குள்
அடங்காதவள்.
அழகென வரையறுக்கப்
படும் அனைத்திற்கும்
முடங்காதவள்.

நீ அன்பு சல்லடையின்
துவாரத்தின் வழியே
ஆகாயத்திலிருந்து பூமி
புகுந்தவள்.

என் நிசப்தங்கள் கலைத்து
நிழலாய் நுழைந்த
காரிகை நீ அன்பிற்கு
உகந்தவள்.

தொலைதூரம் தெரியும்
தோட்டத்தில் கணநேரம்
ஓய்வெடுக்க எண்ணுகையில்
ஆயுள் முழுக்க நான்
வாழ ஒரு பூக்கூட்டத்தை
எனக்காக உருவாக்கியவள்.

பிறப்பு இறப்பு போலவே
உன் அன்பும் வாழ்வில்
ஒருமுறை தான்.
எனது சிநேகங்கள்
உனக்குள் தொடங்கி
உனக்குள்ளேயே முடிந்து
விடுகிறது.

உன்னைவிட நான்
வாழ்வதற்கு வேறொரு
பெரிய காரணம் எதுவும்
கிட்டுவதில்லை.

உன் அன்பைப்
போல் நினைப்பதற்கு
அருகாமையில் வேறெதுவும்
எட்டுவதில்லை.

உண்ணல் உடுத்தல்
உறைதல் போல
உயிர்த்தலுக்கு
அடிப்படையாய் அமைந்து
விடுகிறது உன் நேசம்.

எனக்கான வசந்த
காலங்கள் உனது
புன்னைகையில் ஒளித்து
வைக்கப் பட்டுள்ளன.

நீ சிந்தும் ஒவ்வொரு
துளி விழிநீரும் என்
இதயத்தில் ஈட்டியாகி
நொடிக்கொரு முறை
மரணம் தருகின்றன.

அதனால்தான் உன்
அழுகையை நான்
என்றும் அனுமதிப்பதில்லை.
நீயோ அதுநான் உன்மீது
கொண்ட அன்பால் என
புரிந்துக் கொள்கிறாய்.

நமக்குள் இருக்கும்
இடைவெளியில்
காற்று அமர்ந்து
கதை பேசுகிறது.

நமது நிழல்களின்
நெருக்கத்தில்
இறுக்கி அணைத்து
கொள்கின்றன.
தேன் குடிக்கும்
வண்டுகள்.

இயற்கையாய் அமைந்த
எதற்கும், உன்னை
பிரதிபலித்தல் என்பது
உதட்டில் வியர்ப்பது
போன்று.

உன்னோடு வாழ்கிறேன்.
ஒவ்வொரு நொடியும்.